முகப்பு
புதுதில்லி

"டேம் 999' ஆங்கிலப் படம் முல்லைப் பெரியாறு அணை உடைவதாகக் காட்டுகிறது

புது தில்லி, நவ. 21:  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரளம் மக்களிடம் உணர்வுபூர்வமான பிரச்னையாக மாறிவருகிறது.  நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முடிவு

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:56 PM
பகிர்:

புது தில்லி, நவ. 21:  முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக, கேரளம் மக்களிடம் உணர்வுபூர்வமான பிரச்னையாக மாறிவருகிறது.

 நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிபுணர் குழுக்களை நியமித்தது.

 இந்நிலையில், அணை உடைவது போலவும் அதில் வெளியாகும் வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கி உயிரிழப்பது போலவும் மையமான காட்சிகளில் காட்டுகிறது "டேம் 999' எனும் ஆங்கிலத் திரைப்படம்.  ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை வெளியாகும் இப்படம், இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இங்கு ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

 "100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை முன்னெச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பது போல் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மற்ற இடங்கள் தவிர, ஊட்டியிலும், ஆந்திரம் மாநிலம் ராமோஜி பிலிம் சிட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் நடிகர்களும், கலைஞர்களும் நடித்துள்ளனர்.

 கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன் ராய் இப்படத்தை இயக்கியுள்ளார்.

 "இந்தப் படத்தை பார்த்த பின்னர், முல்லைப் பெரியாறு பழைய அணையை உடைக்க தமிழக அரசே சம்மதம் தெரிவிக்கும்' என்கிறார் இயக்குநர் சோஹன் ராய்.

 ஏற்கனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து எடுத்துள்ள  "டாம்ஸ்' டாகுமெண்டரிக்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. தற்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து ராய் படம் எடுத்துள்ளார்.

"டேம் 999' படத்தில் ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து "தினமணி' நிருபருக்கு தொலைபேசி மூலம் சோஹன் ராய் அளித்த பேட்டி:

 நூறு ஆண்டு கால பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அப்போது சீனாவில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டாம் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் பேர் உயிர் இழந்த சம்பவத்தைக் கண்டேன். அது உலகில் ஏற்பட்ட ஒன்பதாவது பெரிய பேரிடர் சம்பவம் ஆகும். அதே அபாயம்   முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது.

 அரசியல் சிக்கல் காரணமாக இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தப் படத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் காண்பிக்காவிட்டாலும், கேரள மாநிலம் ஆலப்புழையில் படமாக்கப்பட்ட காட்சிகள் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைப் பிரதிபலிக்கும்.

 படத்தின் கிளைமாக்ஸில், அணை உடையும் காட்சி தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. அணை உடைந்தால் மக்களை அப்புறப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் காட்டப்படுகின்றன.

 முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு தமிழக அரசே ஒத்துழைக்கும் என்று கூறினார்.

 தமிழகம், கேரளம் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்னையாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மாறிவிட்ட நிலையில், "டேம் 999' படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.