புழுதிப் புயலில் திணறும் தில்லி
புயிலின் தாக்கமோ உச்சி, பனியின் தாக்கமோ கடுமை, புயலின் தாக்கமும் அதிகம்! இதுதான் தலைநகரில் மாறி மாறி வரும் வானிலை. காலையில் உதிக்கும் சூரியக் கதிர்கள் மதியத்தில் உச்சியில் வாட்டி வதைக்கும் கோடைக் காலம
புயிலின் தாக்கமோ உச்சி, பனியின் தாக்கமோ கடுமை, புயலின் தாக்கமும் அதிகம்! இதுதான் தலைநகரில் மாறி மாறி வரும் வானிலை.
காலையில் உதிக்கும் சூரியக் கதிர்கள் மதியத்தில் உச்சியில் வாட்டி வதைக்கும் கோடைக் காலம். வெயிலின் தாக்கத்தால் எழும் அனல் காற்று தில்லிவாசிகளை சில நாள்களாக வதைத்து வருகிறது.
இதற்கு நடுவே திடீரென்று சூழும் கருமேகங்கள், புழுதிப் புயலுடன் பெய்யும் சிறு மழை ஆகியவை தில்லியின் வெப்பத்தைக் குறைத்து மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றன.
வியாழக்கிழமை மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் இரண்டு மணி அளவில் தில்லி அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனால், நகரின் சில பகுதிகளில் இரவு நேரம் போல் இருந்தது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தில்லிவாசிகளுக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது. மேகங்கள் சூழ்ந்து, புழுதிக்காற்று வீசத் தொடங்கிவுடன் புழுதிப்படலம் சூழ்ந்தது.
பலத்த காற்றுடன் கலந்து வீசிய புழுதியால் (ஆந்தி) மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட கார்களில் செல்பவர்களும் தங்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் திணறினர்.
பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 46 கி.மீ. வேகத்தில் புழுதிப்புயல் வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் சில நாட்களாக அடிக்கடி புழுதிப் புயல் (ஆந்தி) வீசுகிறது.
இதனால் தில்லியின் வெப்பநிலை சிறிது குறைந்து சில இடங்களில் மழை பெய்தது.
கோடைக்காலங்களில் ஏற்படும் புழுதிப்புயல் குறித்து தில்லி ஐஐடியில் உள்ள வாயு மண்டலம் அறிவியல் மையத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து, வாயு மண்டல துறையின் ஆய்வு மாணவர் ஆர். சத்யசீலன் கூறியது:
புழுதிப் புயல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசு. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, எரிவாயுவால் வெளியாகும் புகை, குப்பைகளை எரிப்பதால் வெளியாகும் புகை போன்றவற்றால் வாயு மண்டலத்தில் மேகங்களைப் போல் புழுதி சேர்ந்து விடுகிறது.
இந்த வகை மேகங்கள் 10-12 கிலோ மீட்டர் உயரத்துக்குப் படர்ந்திருக்கும். தில்லியில் மண்ணின் மேற்பரப்பு தளர்ச்சி தன்மை உடையது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வீசும் அதிவேக காற்றுடனும் சேர்ந்து தில்லியில் புழுதிப் புயல் வீசும்போது, நகரே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த வகை புழுதி மேகங்கள் பூமியில் விழும் சூரிய கதிர்களை சிறிது கட்டுப்படுத்தி வெப்பத்தை குறைக்கும். அதே நேரத்தில் இதை சுவாசிப்பதால் சுகாதார கேடுகள் ஏற்படும்.
புழுதி மண்டலம் சூழ்ந்த நகரங்களில் தில்லி முதலிடத்திலும் மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மழைக்காலங்களிலும், பனிக்காலங்களிலும் இவை புமியில் இருந்து அதிக உயரத்தில் சென்று விடுவதால் இந்தப் புழுதி மண்டலம் கண்களுக்கு தெரிவதில்லை என்று சத்யசீலன் தெரிவித்தார்.