டிஜிட்டல் வகுப்புகளாகும் "டிடிஇஏ' பள்ளிகள்: பழைய மாணவர்களின் முயற்சி
புது தில்லி பிப். 28: தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்குக் கல்வி கற்கும் முறை அறிமுகமாகிறது. அந்த பள்ளியில் பயின்று தற்போது சிறந்த பணியில் உள்ள பழைய
புது தில்லி பிப். 28: தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்குக் கல்வி கற்கும் முறை அறிமுகமாகிறது. அந்த பள்ளியில் பயின்று தற்போது சிறந்த பணியில் உள்ள பழைய மாணவர்களின் சொந்தப் பணத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்.
மாணவர்களுக்கு டிஜிட்டல் முறையில் கற்பிக்கும் இந்த புதிய முறை 80 ஆண்டு கால பழமைவாய்ந்த டி.டி.இ.ஏ. பள்ளி வரலாற்றில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.
டிஜிட்டல் பாடம்: தில்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழக மாணவர்கள் தில்லித் தமிழ்க் கல்விக் கழக பள்ளிகளில் படித்து வருகிறார்கள். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி கற்கும் முறையில் "டிஜி கிளாஸ்' தொழில்நுட்பம் எனப்படும் டிஜிட்டல் முறையியிலான கல்வி கற்கும் முறையை தனியார் பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இந்த "டிஜி கிளாஸ்' முறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் டி.டி.இ.ஏ. பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. "பியர்சன் எஜுகேஷன்' என்ற தனியார் நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.
இந்த திட்டத்தின்படி ஆறு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடத் திட்டங்கள் டிஜிட்டல் முறையில் கற்பிக்கப்படும். பியர்சன் நிறுவனம் இந்த டிஜிட்டல் முறையை தயார் செய்துள்ளது. இதைப் போல் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடத் திட்டங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான பாடல்கள் (ரைம்ஸ்) அனிமேஷன் படத்துடன் திரையிட்டுக் காண்பித்துப் பாடம் நடத்தப்படும்.
இதற்காக அனைத்து வகுப்பு அறைகளிலும் ஒரு புரொஜெக்டர், வெள்ளைத் திரை, கம்ப்யூட்டர் சிபியு அமைக்கப்படுகிறது.
பழைய மாணவர்களின் நிதியுதவி: தில்லித் தமிழ்க் கல்விக் கழக பள்ளியில் 1965-ம் ஆண்டு படித்த ராம்நாத் கௌஷிக், கணேஷ் ஆகிய மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் சேர்ந்து இந்தப் புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கான முழு நிதியுதவி அளிப்பதாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலாளர் ராஜு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: ஒரு பள்ளியில் இந்த திட்டம் தொடங்க சுமார் 9 லட்சம் செலவாகிறது. இந்த தொகையைப் பழைய மாணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக லோதி ரோடு பள்ளி, லக்ஷ்மி பாய் நகர் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பிற டி.டி.இ.ஏ. பள்ளிகளிலும் இந்த திட்டத்தைத் தொடங்க நித உதவி அளிப்பது தொடர்பாக பழைய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பழைய மாணவர்களின் நிதி உதவியிலேயோ அல்லது டி.டி.இ.ஏ. நிர்வாகத்தின் செலவிலேயோ டிஜிட்டல் கிளாஸ் முறை விரைவில் டி.டி.இ.ஏ.வின் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வியை இனி டி.டி.இ.ஏ. மாணவர்கள் பெறுவார்கள் என்று என்று ராஜு தெரிவித்தார்.