தேதியைச் சொன்னால் கிழமை! கிழமையைச் சொன்னால் தேதி!
புது தில்லி ஜன. 12: கடந்த வார நாள்களில் நடந்தவைப் பறறிக் கேட்டாலே மொபைல் போன்களில் உள்ள காலண்டரைத் தேடுபவர்கள்தான் அதிகம். இன்னும் பலர், தங்களது பிறந்த நாளை எந்தக் கிழமையில் கொண்டாடினோம் என்பதைக் கூட
புது தில்லி ஜன. 12: கடந்த வார நாள்களில் நடந்தவைப் பறறிக் கேட்டாலே மொபைல் போன்களில் உள்ள காலண்டரைத் தேடுபவர்கள்தான் அதிகம்.
இன்னும் பலர், தங்களது பிறந்த நாளை எந்தக் கிழமையில் கொண்டாடினோம் என்பதைக் கூட ஓரிரு நாள்களில் மறந்து போகிறோம்.
ஆனால், 2011 ஆம் ஆண்டில் எந்த ஒரு தேதியைக் குறிப்பிட்டாலும் அது எந்தக் கிழமையில் வந்தது என்று பளிச்சென்று கூறுகிறார் ஐந்தரை வயது சிறுவன் கார்த்திக்.
தில்லி நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வரும் கார்த்திக்குக்கு 2011-ஆம் ஆண்டின் அனைத்து தேதிகளும், அதன் கிழமைகளும் அத்துப்படி.
அது மட்டுமின்றி, 2011-ல் முக்கியமான தலைவர்களின் பிறந்த நாள்கள், பண்டிகைகளைச் சொன்னால் போதும், மறு கணமே கிழமையைக் கூறுகிறார்.
தற்போது நடப்பு ஆண்டின் நாள்களையும் கிழமைகளையும் மனத்தில் பதிவு செய்து வருகிறார் கார்த்திக்.
அவரது ஞாபகத் திறமையை பார்த்து அசந்துப் போகும் பள்ளி ஆசிரியர்கள், உறவினர்கள், அண்டை வீட்டினர் கார்த்திக்கு "மனித காலண்டர்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.
கார்த்திக்கின் தந்தை சுரேஷ் மத்திய அரசில் பணியாற்றி வருகிறார். தாய் ஆனந்தி கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு தற்போது இல்லத்தரசியாக உள்ளார்.
கார்த்திக்கின் திறமை குறித்து அவரது தந்தை சுரேஷ் கூறுகையில், "தினந்தோறும் காலண்டரைக் கிழிக்க சிறு வயதிலிருந்து கார்த்திக்குப் பழக்கம் ஏற்படுத்தினேன். அன்று முதல் காலண்டர் மீது அவனுக்கு ஈடுபாடு ஏற்பட்டது.
எங்கு சென்றாலும் முதலில் காலண்டரைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருநாள் நானும் எனது மனைவியும் ஒரு குறிப்பிட்ட தேதியை நினைவில் கொண்டுவந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது அருகே இருந்த கார்த்திக், நீங்கள் குறிப்பிடும் தேதியின் கிழமை தவறு என்று கூறினான். அப்போதுதான் கார்த்திக்கிடம் உள்ள நினைவாற்றலைப் பற்றித் தெரிந்து கொண்டோம்.
அரக்கோணத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்றாலும் அங்கும் காலண்டரை வைத்துப் படித்து கொண்டே இருப்பான்.
அவனுடைய வகுப்பு ஆசிரியர் அவனிடம் தினந்தோறும் தேதியின் கிழமையைக் கேட்டு பலகையில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
தேதியைக் குறிப்பிட்டு யார் பேசினாலும், அந்த நாளின் கிழமையை கார்த்திக் கூறுவான்.
2011-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைகள், தலைவர்களின் பிறந்தநாள் ஆகியவற்றைக் கேட்டவுடன் தேதியுடன் கூறும் ஞாபக சக்தி கார்த்திக்கிடம் உள்ளது.
தற்போது 2012-ஆம் ஆண்டுக்கான காலண்டரை மனத்தில் பதிவு செய்வதற்காக, அவனேதினந்தோறும் வீட்டில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறான். கார்த்திக்கை எதிர்காலத்தில் விஞ்ஞானியாக ஆக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்' என்றார்.