பாடம் படிக்கும் வயதில் பாசுரம் பாடும் சிறுமி!
புது தில்லி, மார்ச் 17: "ஞானம் என்பது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. அதைப் பெறுவதற்கு இறைவன் அருள் வேண்டும்' என்பார்கள் மூத்தோர். அதுவும் இறை ஞானம் பெறும் திருப்பாடல்களையே பாடுவதாக இருந்தால் என்னவென்று
புது தில்லி, மார்ச் 17: "ஞானம் என்பது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. அதைப் பெறுவதற்கு இறைவன் அருள் வேண்டும்' என்பார்கள் மூத்தோர். அதுவும் இறை ஞானம் பெறும் திருப்பாடல்களையே பாடுவதாக இருந்தால் என்னவென்று எடுத்துரைப்பது!
பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்வதே தற்போதைய தலைமுறைக்கு அசாத்திய விஷயம் என்றாகிவிட்டது. அத்துடன், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், சுப்ரபாதம், ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், நவக்கிரக ஸ்தோத்திரம் என நூற்றுக்கணக்கான பாசுரங்களையும் பாடுவது என்றால் எப்படி? அதற்குத்தான் "ஞானம்' கைகூட வேண்டும் என்றார்களோ நம் முன்னோர்கள்!
தில்லி கோல் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்புப் படிக்கும் சிறுமி மாதங்கி அத்தகைய இறையருள் சிறுவயதிலேயே கைவரப் பெற்றவராகத் திகழ்கிறார். கோல் மார்கெட் பகுதி "கான்வென்ட் ஆப் ஜீஸஸ் மேரி' பள்ளியில் படித்து வருகிறார் இவர்.
வார்த்தை உச்சரிப்பு, தொனி என பல சூட்சுமங்கள் பொதிந்துள்ள பாசுரங்களை அற்புதமாக, இறைவுணர்வுடன் இச்சிறுமி பாடிக் கேட்கும்போது மனம் அதிலேயே லயித்து விடுகிறது. கிட்டத்தட்ட 50 பக்கங்களுக்கு மேல் உள்ள பாசுரங்களைப் பார்க்காமல் ஒப்பித்து அசத்திவிடுகிறார் இச்சிறுமி.
"எனக்கு 5 வயது இருக்கும் போதே இது போன்ற பாசுரங்களைப் பாடுவது பிடித்த விஷயமாகிவிட்டது. பெற்றோருடன் கோயிலுக்குச் செல்லும்போது குருக்கள் ஓதும் இறை நாமங்களை நானும் சேர்ந்து உச்சரிப்பேன். இறைவனின் பாசுரங்களைப் பாடுவது எளிதாக இருக்கிறது. இதனால் மனனமும் எளிதாகிவிட்டது. இப்பாசுரங்களைப் பாடுவதில் கிடைக்கும் திறமை, பள்ளிப் பாடங்களை புரிந்துகொண்டு படிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
அதனால், வகுப்பிலும் சிறப்பிடம் பெற முடிகிறது.
மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்து படிக்க வைக்கின்றனர். ஆனால், சில ஆசிரியர்கள் கண்டிக்காமல் கற்றுத் தரும்போது, அதுவும் மாணவர்களைப் படிப்பில் தானாகவே ஈடுபாடு கொள்ளச் செய்வதைப் பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் ஆசிரியையாக வர வேண்டும் என்பதே என் லட்சியம்' என்று கூறுகிறார் அந்தச் சிறுமி.
கடந்த ஆண்டு ஆர்.கே. புரம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயண சத் சங்கம் மூலம் நடைபெற்ற ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் ஒப்பித்தல் போட்டியில் மாதங்கி பரிசு வென்றுள்ளார். சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட இவரது பெற்றோர் கே.சந்த்ரு, சோபனாவும் மாதங்கியை ஊக்குவித்து வருகின்றனர்.
இது குறித்து, மாதங்கியின் தந்தை கே. சந்துரு கூறியது:
சிறுவயதில் இருந்தே இறை நாமாவளிகளைப் பாடுவது மாதங்கிக்கு மிகவும் பிடிக்கும். அவளே தானாகவே இதில் ஆர்வம் காட்டினாள். "கோல்மார்க்கெட் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் சத் சங்கம்' சார்பில் வாரம்தோறும் நடைபெறும் பாராயண நிகழ்ச்சியில் மாதங்கியை அழைத்துச் செல்வோம். அப்பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள்.
2010-ம் ஆண்டின்போது உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றிருந்தோம்.
அப்போது, அங்கு சுவாமி சன்னதியில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணத்தை இடைவிடாது மாதங்கி பாடினாள். அதைப் பார்த்த, அப்போதிருந்த பேஜாவர் மடத்தின் ஆசார்ய சுவாமிகள், மாதங்கியைப் பாராட்டினார். இது மறக்கமுடியாத சம்பவம்.
பாடல்களைப் பாடும்போது ஏதாவது சந்தேகம் இருந்தால் மட்டும் நாங்கள் அவளுக்கு உதவி செய்கிறோம்.
தற்போது ஸ்ரீ வேங்கடேச ஸýப்ரபாதம், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமாவளி ஸ்தோத்ரம், ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம், ஸ்ரீ த்வாதச நாம பஞ்ஜரம், ஸ்ரீ ஸýதர்சநாஷ்டகம், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம், ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் என பல்வேறு பாசுரங்களை பார்க்காமலேயே மாதங்கி ஒப்பிப்பாள். இசை மேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களை விரும்பிக் கேட்டுப் பாடுவதால் இசை வகுப்பில் அவளைச் சேர்க்க இருக்கிறோம் என்றார் சந்துரு.