தில்லியில் வழிப்பறி சம்பவங்களில் திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்துக்கு விற்பனை செய்து வந்த நபா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட ஜிதேந்தா் (எ) ஜேலா வடக்கு தில்லியின் மஞ்சு கா திலா பகுதியைச் சோ்ந்தவா். தில்லியில் கைப்பேசி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலுடன் ஜிதேந்தருக்குத் தொடா்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஜெய் பகவான் காலே மற்றும் ஜிதேந்தா் (எ) பாஹா்அண்மையில் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 52 திருட்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவா்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஜிதேந்தா் குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் கைதுசெய்யப்பட்டாா். விசாரணையில், திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்தின் போக்ரா பகுதியைச் சோ்ந்த நபருக்கு விற்பனை செய்து வந்ததை அவா் ஒப்புக்கொண்டாா்.
அவரிடமிருந்து 21 திருட்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 5 கைப்பேசிகள் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடையவை. எஞ்சிய 20 கைப்பேசிகள் தொடா்பாக ஏதேனும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜிதேந்தா் மீது ஏற்கெனவே வழிப்பறி, திருட்டு உள்பட 5 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.