போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள் மூவர் கைது
தில்லியில் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தில்லியில் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தென்கிழக்கு மாவட்டக் காவல் துணை ஆணையர் சின்மய் பிஸ்வால் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஏப்ரல் 15-ஆம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், லோதி காலனி மேம்பாலத்தின் கீழ் தகராறில் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த மூன்று பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள காயச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்தில் காலி துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்துள்ளன. மேலும், ரத்தக் கறை படிந்திருந்தது.
காயமடைந்தவர்கள் ஷபிக் (20), ரசீத் (20), ஃபெரோஸ் (23) ஆகியோர் என்றும் ஹஜ்ரத் நிஜாமுதீன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டது. அவர்களை மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 16-ஆம் தேதி நள்ளிரவில் பஸ்தி ஹஜ்ரத் நிஜாமுதீன் பகுதிக்கு சம்பந்தப்பட்ட மூவரும் மதுரா சாலையில் இருந்து வருவதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, லோதி மேம்பாலம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த மூவரை நிறுத்தி போலீஸார் விசாரிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
அவர்களின் மோட்டார்சைக்கிள் முன் போலீஸ் வாகனத்தை நிறுத்தி தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அவர்களைப் பிடிக்க காவல் உதவி ஆய்வாளர் பரத் சிங் உள்ளிட்ட போலீஸார் முயன்ற போது, மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்திருந்தவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அந்த வேளையில், மோட்டார்சைக்கிளில் அமர்ந்திருந்த இருவர் தப்பியோடிவிட்டனர். துப்பாக்கியால் சுட்டவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
அவர் நேப் சராய் பகுதியைச் சேர்ந்த மோனு என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து பறிமுதலான மோட்டார்சைக்கிள் மங்கோல்புரி பகுதியில் வழிப்பறி செய்யப்பட்டது எனத் தெரிய வந்தது.
லோதி காலனி மேம்பாலம் பகுதியில் சம்பவத்தன்று கொள்ளையடிப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்ற போது அங்கு நடைபாதையில் அமர்ந்திருந்த மூன்று பேரிடம் வாக்குவதாம் ஏற்பட்டதாகவும், அப்போது, அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் சோனு வாக்குமூலம் அளித்தார்.
பின்னர், மோனுவின் கூட்டாளிகளான மந்தாகிர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் மற்றும் சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவர் மீதும் உத்தர பிரதேசம், தில்லியில் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் இருப்பது தெரிய வந்தது. மூவரிடமிருந்தும் 3 நாட்டுத் துப்பாக்கிகள், 4 தோட்டாக்கள், கத்தி, 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் அதிகாரி சின்மய் பிஸ்வால் தெரிவித்தார்.