நில ஆக்கிரமிப்புப் புகார் எதிரொலி: என்டிஎம்சிக்குள்பட்ட தனியார் பள்ளிகளில் ஆய்வு
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (என்டிஎம்சி) பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்படவுள்ளது.
வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (என்டிஎம்சி) பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: ரோஹிணி, ஜகங்கீர் புரி, சிவில் லைன், மொடல் டவுன் ஆகிய இடங்களில் உள்ள தனியார் பள்ளிகள் சில நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக புகார்களைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகளில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது, அந்தப் பள்ளிகள் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, வடக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மிக விரைவில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.
மேலும், தனியார் பள்ளிகளை ஒட்டிய பகுதிகளில் பெருமளவில் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்கள் கிடைக்கப் பெறுகின்றன. தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி வாகனங்களை சாலையோரமாக நிறுத்துவதாலேயே இந்த வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாகவும் ஆய்வு நடத்தவுள்ளோம்.
அனைத்து தனியார் பள்ளிகளிலும் சரியான முறையில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்படும். பார்க்கிங் வசதிகள் இல்லாத பள்ளிகளை சீல் வைப்பது தொடர்பாக விவாதித்து வருகிறோம்.
மேலும், வாகன நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கு அருகில் நிறுத்தப்படும் பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் மாநகராட்சியால் உடனடியாக அகற்றப்படும் என்றனர்.