முகப்பு
புதுதில்லி

ஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு  ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

வலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1

Updated On : 21 மே, 2018 at 11:48 PM
பகிர்:

வலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்யாத காரணத்தினால், கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவுக்கு ஹைதராபாதைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனமான பிரஜ்வாலா கடந்த 2015-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்துடன், பாலியல் வன்கொடுமை தொடர்பான விடியோ காட்சிகளைக் கொண்ட 2 பென் டிரைவ் சாதனங்களை அனுப்பி வைத்து, அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது.
இதுகுறித்து சிபிஐ அமைப்பின் விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, சமூகவலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூகுள், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சமூகவலைதளங்கள் பதில் தாக்கல் செய்யாததை கண்டு நீதிபதிகள் அதிருப்தியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், யாகூ, முகநூல் அயர்லாந்து, முகநூல் இந்தியா, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோசாப்ட், வாட்ஸ் அப் ஆகியவை, ஆபாச விடியோக்களைமுடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த நிறுவனங்கள் பதில் தாக்கல் செய்யவில்லை' என்றனர்.
அப்போது மத்திய அரசு தரப்பில், இணையதள கணினி குற்றம் குறித்து தகவல் தெரிவிக்க தனியாக இணையதளம் தொடங்கப்படவுள்ளதாகவும், ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்பு அந்த வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு விடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டுவிட்டு நீதிபதிகள் கூறுகையில், ஜூலை 15-ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளிக்க முடியாது. ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு முடித்துக் கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பதில் தாக்கல் செய்யாத, யாகூ, முகநூல் அயர்லாந்து, முகநூல் இந்தியா, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோசாப்ட், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் அந்த வலைதளங்கள், ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்பு பதில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.