நரேலா மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வலியுறுத்தி விரைவில் பேரணி'
ரித்தாலா- நரேலா இடையே மெட்ரோ வழித்தடத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தி மிக விரைவில் பேரணி நடைபெறவுள்ளதாக வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் உதித் ராஜ்
ரித்தாலா- நரேலா இடையே மெட்ரோ வழித்தடத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தி மிக விரைவில் பேரணி நடைபெறவுள்ளதாக வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
ரித்தாலா - நரேலா இடையேயான 21.73 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டத்தை 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்திருந்த தில்லி அரசு, தற்போது அத் திட்டத்தை நிராகரித்துள்ளது.
இப்பகுதிகளில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர். இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர்.
ரித்தாலா- நரேலா வழித்தடத்தில் பல கிராமங்கள் உள்ளதால், இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால் அப்பகுதியை ஒட்டியுள்ள பல கிராம மக்கள் பயனடைவர். கிராமப்புற மக்களை பாரபட்சத்துடன் நடத்துவதை தில்லி அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வழித்தடம் அமைக்கப்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என தில்லி அரசு கூறும் காரணம் ஏற்புடையதல்ல. மக்கள் நலனுக்காக பொருளாதார இழப்பைத் தாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வலியுறுத்தி மிக விரைவில் பேரணி நடத்தவுள்ளோம். இத் திட்டத்தை ஆரம்பிக்காமல் ஆம் ஆத்மி கட்சியினர் இப்பகுதியில் வாக்கு கேட்டு வருவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார் அவர்.