ஆதார் மூலம் யோனோ' சேமிப்பு கணக்கு தொடங்குவதை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, ஆதார் மூலம் வாடிக்கையாளர்கள் யோனோ எனும் புதிய சேமிப்பு கணக்கை தொடங்கும் வசதியை கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், அந்த வங்கியில் ஏராளமானோர் சேமிப்பு கணக்கை தொடங்கி வந்தனர்.
இதனிடையே, ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை என்றும், வங்கி கணக்குடன் ஆதாரை சேர்ப்பது கட்டாயமில்லை என்றும் தெரிவித்தது. இந்த தீர்ப்பின் எதிரொலியாக, ஆதார் மூலம் யோனோ சேமிப்பு கணக்கை தொடங்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரி கூறியதாவது:
ஆதார் மூலம் யோனோ சேமிப்பு கணக்கை தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதலால் புதிதாக சேமிப்பு கணக்கை தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தேவையான ஆவணங்களை இனி வங்கிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
ஆதாரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பதால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து சில விளக்கத்தை எஸ்பிஐ கேட்டுள்ளது. இதற்கான விளக்கம் கிடைத்தவுடன், ஆதார் மூலம் வங்கி கணக்கை தொடங்கும் நடவடிக்கை மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.