சத்தீஸ்கர் தேர்தலில் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் வாஜ்பாய் மருமகன் போட்டி
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல்வர் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில்
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல்வர் ரமண் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பாஜகவின் மறைந்த மூத்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் இருகட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் முதல்வர் ரமண் சிங் போட்டியிடுகிறார். இந்நிலையில், முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2ஆவது பட்டியலை காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. இதில் ராஜ்நந்த்கோன் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பிரதமரும், பாஜவின் மறைந்த மூத்த தலைவருமான வாஜ்பாயின் மருமகன் கருணா சுக்லா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவில் முன்பு இருந்த சுக்லா, அக்கட்சியில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்தார்.
காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் முதல்கட்டமாக வெளியிட்டிருந்தது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமையே (அக். 23) கடைசி நாளாகும்.