முகப்பு
புதுதில்லி

ராஜஸ்தான், ம.பி. தேர்தல்: தற்போதைய பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் பேரவைத் தேர்தல்களில், பாஜக சார்பில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள பலருக்கு

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:38 AM
பகிர்:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் பேரவைத் தேர்தல்களில், பாஜக சார்பில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள பலருக்கு அக்கட்சி மீண்டும் வாய்ப்பளிக்காது என்று கூறப்படுகிறது.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச பேரவைக்கு நவம்பர் 28-ஆம் தேதியும், 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவைக்கு டிசம்பர் 7-ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2003-இல் இருந்து பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலத்திலும், ராஜஸ்தானிலும் ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. எனவே, புது முகங்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இந்த அதிருப்தியை சமாளிக்க முடியும் என்று பாஜக கருதுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பாஜக சார்பில் எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் குறித்து கட்சியினரிடமும், இதர தரப்பினரிடமும் கருத்துகள் கோரப்பட்டு வருகின்றன. 
அதனடிப்படையில், யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மக்களிடம் நற்பெயர் இல்லாத எம்எம்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். 
இந்த இரண்டு மாநிலங்கள் மட்டுமல்லாது, சத்தீஸ்கரிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தானில் கடந்த 2013-இல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 163 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 165 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.