சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி
ஒரு சின்ன சந்தேகம்தான், கேரளத்தில் தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதாகக் காரணமாக இருந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில், தாய், சகோதரன் கொலை வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு ஏற்பட்ட சின்ன சந்தேகம்தான், கொலையாளியைக் காட்டிக்கொடுத்திருக்கிறது என்ற பின்னணி தெரிய வந்துள்ளது.
நெடும்கண்டம் அருகே, தாய் மற்றும் அண்ணனைக் கொலை செய்த வழக்கில் சஜி (43) கைதான நிலையில், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடல் கூராய்வு செய்யப்பட்டது.
மேரிகுட்டி (70), அவரது மூத்த மகன் ரெஜி (47) ஆகியோரது அழுகிய உடல்கள் கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்ட நிலையில், இளைய மகன் சஜி தலைமறைவானார். பிறகு காவல்துறையின் தேடுதல் வேட்டையில் அவர் கைதானார்.
Advertisement
ஏப். 4ஆம் தேதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த சஜிக்கும் தாய் மற்றும் சகோதரருக்கும் இடையே ஏற்படட் வாக்குவாதம் முற்றியதில், அவர்களைக் கொலை செய்து வீட்டு பின்பக்கம் புதைத்திருக்கிறார்.
பிறகு வழக்கம் போல அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். கேரள தேர்தலின்போதும் அவர் மட்டும் வந்து வாக்கு செலுத்தியிருக்கிறார். அவர்களது வீட்டுக்கு ஆட்டோ ஓட்டி வந்தவருக்கு, சஜியின் தாயும் சகோதரனும் காணவில்லை என்பது குறித்து சந்தேகம் வந்து, சஜியின் சகோதரி சினிக்கு தொலைபேசி வாயிலாக அவர் தகவலை தெரிவித்திருக்கிறார்.
சினி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்தான் தாய், மகன் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், 2018ஆம் ஆண்டு சிஜியின் தந்தை மாயமானது குறித்து ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுவும் தற்போது தூசு தட்டப்படுகிறது.