கழிப்பிடங்கள், குப்பைக் கிடங்குகள் பராமரிப்பு: தனியாரிடம் வழங்க இடிஎம்சி ஆலோசனை
தூய்மை இந்தியா தரப்பட்டியலில் இடம் பெறும் வகையில், கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள், குப்பைக்
தூய்மை இந்தியா தரப்பட்டியலில் இடம் பெறும் வகையில், கிழக்கு தில்லி மாநகராட்சி (இடிஎம்சி) பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள், குப்பைக் கிடங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் வழங்க இடிஎம்சி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக இடிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் தூய்மை இந்தியா இயக்கம் கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தூய்மை நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
2017- ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலில் இடிஎம்சி 196 -ஆவது இடத்தைப் பெற்றது. இந்நிலையில், 2018- ஆம் ஆண்டுக்கான தூய்மை இந்தியா தரப் பட்டியலில், இடிஎம்சி, 145 இடங்கள் பின்தங்கி 341-ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, தூய்மை இந்தியா பட்டியலில் முன்னிலையில் இடம் பெறும் வகையில், இடிஎம்சி பகுதியில் பல்வேறு தூய்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், இடிஎம்சி பகுதிகளில் தூய்மை இந்தியா இயக்க விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்படி, நிகழாண்டில் சுமார் 30,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இடிஎம்சி பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள், குப்பைக் கிடங்குகளை சிறப்பாகப் பராமரிக்கும் வகையில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியாரிடம் வழங்க முடிவெடுத்துள்ளோம். மேலும், புதிதாக கழிப்பிடங்கள் அமைக்கும் பொறுப்பையும், வீடுகளுக்கே வந்து குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பையும் தனியாரிடம் வழங்கவுள்ளோம். இதன்மூலம் தூய்மை இந்தியா தரப்பட்டியலில் முன்னிலை பெறுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.