தில்லியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டது. ஹரியாணா மாநிலம், ஜாஜரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.37 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானது. இதன் அதிர்வுகள் தில்லியிலும் உணரப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 6.28 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானது.
இது குறித்து தேசிய நில நடுக்கவியல் மையத்தின் இயக்குநர் வினீத் குமார் கூறியதாவது: தில்லி மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் நிலநடுக்க மண்டலம் நான்கில் அமைந்துள்ளன. இதனால்தான், ஹரியாணா மாநிலம் ரோத்தக், ஜோன்ஹா, பானிபட் ஆகிய இடங்களில் சிறிய மற்றும் நடுத்தர தீவிரத்தன்மையுடன்கூடிய நிலநடுக்கத்தைக் காண்கிறோம். இதன் தாக்கம் தில்லியிலும் உணரப்படுகிறது என்றார் அவர்.
இமயமலைப் பிராந்தியம், வடகிழக்கு மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகள் நாட்டின் நிலநடுக்க வரைபடத்தின் மண்டலம் ஐந்தில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் நிலநடுக்க செயல்பாடுகளின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகியுள்ளன.