காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சார்பில் கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, என்டிஎம்சியின் 8 பகுதிகளில் இருந்து சென்ட்ரல் பார்க் வரை மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலம் நடத்தப்பட்டது.
மண்டி ஹவுஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாராகம்பா சாலை வழியாகவும், பாலிகா கேந்திராவிலிருந்து பாலிகா பார்க்கிங் வழியாகவும், படேல் செளக் மெட்ரோ நிலையத்திலிருந்து ஜன்பத் வழியாகவும், ஆர்.கே. ஆஸ்ரம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பஞ்ச்குவான் சாலை வழியாகவும், கோல் மார்க்கெட், சஹித் பகத் சிங் பிளேஸிலிருந்து எஸ்பிஎஸ் மார்க் வழியாகவும், கோல் டக் கனா, பங்களா சாகிப்பிலிருந்து பாபா கரக் சிங் மார்க் வழியாகவும், பிளாஸா இஎஸ்எஸ் அவுட்டர் சர்க்கிளில் இருந்து ஸ்டேட் என்ட்ரி வழியாகவும், பாலிக்கா பஜார் 1-ஆவது கேட்டிலிருந்து இன்னர் சர்க்கிள் வழியாகவும் மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலங்கள் சென்ட்ரல் பார்க்கை வந்தடைந்தன.
இதைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி வைத்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு, புது தில்லி மக்களவை பாஜக உறுப்பினர் மீனாட்சி லேகி, என்டிஎம்சி தலைவர் நரேஷ் குமார், செயலாளர் ராஷ்மி சிங் உள்பட உயர் அதிகாரிகளும், என்டிஎம்சியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், பணியாளர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.