"போராட்ட இடத்தில் இருந்து கேஜரிவால் பணியாற்றுவார்'
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ள
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், முதல்வருமான கேஜரிவால், உண்ணாவிரத இடத்தில் இருந்தே தனது முதல்வர் பணிகளைக் கவனிப்பார் என்று தில்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்த ராம்லீலா மைதானம், முதல்வரின் இல்லம், ஜந்தர் மந்தர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக கோபால் ராய் மேலும் கூறுகையில், "உண்ணாவிரத போராட்டத்துக்கான 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இறுதியாக ஒரு இடம் அடுத்த இரண்டு நாள்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
மார்ச் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தை கேஜரிவால் தொடங்குகிறார். இதில் ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களும், எம்எல்ஏக்களும், கவுன்சிலர்களும் இடம்பெறுவார்கள்.
மார்ச் 1 முதல் 9ஆம் தேதி வரை குடியிருப்பு நலச் சங்கங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் 560 நியாய யாத்ராக்கள் மண்டல அளவில் நடைபெறும். மார்ச் 9ஆம் தேதிக்கு பிறகு அனைத்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்களும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்பார்கள். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதில் தில்லி வாசிகளை பாஜகவும், காங்கிரஸும் ஏமாற்றி வருகின்றன. இந்த இரு கட்சிகளும் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது பின்வாங்குகின்றன. வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மத்தியில் மகா கூட்டணி ஆட்சி அமைக்கும். பின்னர் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.