முகப்பு
புதுதில்லி

மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான விவகாரத்தில்

Updated On : 4 ஆகஸ்ட், 2020 at 11:11 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

அதில் ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை செயலா் மற்றும் மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் செயலா்கள் கூட்டத்தைக் கூட்டி இறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி, திமுக, பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் யோகேஷ் கண்ணா செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

அதில்,‘ மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில், குழுவை அமைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அதை அடுத்த ஆண்டு அமல்படுத்தும் வகையில், உத்தரவிட்டிருப்பது சரியல்ல. ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.