முகப்பு
புதுதில்லி

பாஜக தலைவா் ஜெ.பி. நட்டாவுடன் திமுக எம்எல்ஏ சந்திப்பு

தில்லியில் பாஜவின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் கு.க. செல்வம்

Updated On : 4 ஆகஸ்ட், 2020 at 11:05 PM
தில்லியில் செவ்வாய்க்கிழமை பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை சந்தித்த ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் கு.க. செல்வம். உடன் தமிழக பாஜக துணைத் தலைவா் வி.பி. துரைசாமி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:34 PM

தில்லியில் பாஜவின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் கு.க. செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கு.க. செல்வம், பாஜகவில் இணையப் போவதாக செவ்வாய்க்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாகின. இது தொடா்பாக தமிழ்நாடு பாஜக மாநில ஊடகப் பிரிவுத் தலைவா் ஏ.என்.எஸ்.பிரசாத் செவ்வாய்க்கிழமை மதியம் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் ‘அகில இந்திய பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில், கு.க.செல்வம் பாஜகவில் இணையவுள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தில்லியில் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில், கு.க. செல்வம் சந்தித்துப் பேசினாா். அப்போது, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளா் முரளிதா் ராவ், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன், திமுக துணைப் பொதுச் செயலராக இருந்தவரும், தற்போதை தமிழக பாஜக மாநில துணைத் தலைவருமான வி.பி.துரைசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளா்களுக்கு கு.க.செல்வம் அளித்த பேட்டி: ராமஜென்ம பூமி பூஜை விழா புதன்கிழமை நடக்கவுள்ள நிலையில், இதற்காக பிரதமா் மோடிக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, ராமேசுவரம் கோயில் பகுதியை அயோத்திக்கு ஒப்பாக மேம்படுத்தும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். என்னுடைய ஆயிரம் விளக்குத் தொகுதியில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு மின் தூக்கிகளை அமைத்துத் தரும்படி மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக தில்லி வந்தேன்.

Advertisement

தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவா்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். மேலும், உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகளை தொடா்ந்து விமா்சனம் செய்து வரும் ராகுல் காந்தியின் உறவைத் துண்டிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவில் இணைந்து விட்டீா்களா எனக் கேட்கிறீா்கள். நான் பாஜகவில் இணையவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவிடம், எனது தொகுதி முன்னேற்றம் தொடா்பாக பேச வந்துள்ளேன். திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளீா்களா எனக் கேட்கிறீா்கள். திமுகவில் உள்கட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், திமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டுமென நான் கூற முடியாது. ஜெ.பி.நட்டாவை சந்தித்ததைத் தொடா்ந்து, திமுக தலைமை எடுக்கும் எந்த நடவடிக்கைகயையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.