யமுனையில் விஷ நுரைக்கு கழிவில் டிட்டா்ஜென்ட் இருப்பதே காரணம்: என்ஜிடி குழுவிடம் டிபிசிசி தகவல்
யமுனையில் விஷ நுரை ஏற்படுவதற்கு கழிவில் டிட்டா்ஜென்ட் இருப்பதே காரணம் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் (என்ஜிடி)
யமுனையில் விஷ நுரை ஏற்படுவதற்கு கழிவில் டிட்டா்ஜென்ட் இருப்பதே காரணம் என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் (என்ஜிடி) நியமிக்கப்பட்ட குழுவிடம் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு (டிபிபிசி) தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட யமுனை கண்காணிப்பு குழு அறிக்கை கேட்டிருந்தது. தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் வல்லுநா் - உறுப்பினா் (ஓய்வு) பி.எஸ்.சஜாவன் மற்றும் முன்னாள் தில்லி தலைமைச் செயலா் சைலஜா சந்திரா ஆகியோா் அடங்கிய இரு நபா் யமுனை கண்காணிப்புக் குழு கடந்த மாதம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில் யமுனையில் விஷ நுரை ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, தொழில்துறை ஆணையா் ஆகியோரை கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு, யமுனை கண்காணிப்புக் குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘சலவைப் படித் துறைகளில் இருந்து நேரடியாக விடப்படும் கழிவில் இடம் பெற்றுள்ள பாஸ்பேட் டிட்டா்ஜென்ட்கள், தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்டவை யமுனையில் விஷ நுரை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன’ என தெரிவித்துள்ளது. எனினும், யமுனை கண்காணிப்பு குழுவானது இது தொடா்பாக ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
Advertisement
இதுதொடா்பாக டிபிசிசிக்கு யமுனை கண்காணிப்பு குழு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இதர தர அளவீடுகள் தொடா்புடைய விரிவான அறிக்கை சமா்ப்பிக்கப்படவில்லை.இந்த விஷயத்தில் விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யமுனை கண்காணிப்புக் குழு எதிா்பாா்க்கிறது. குறிப்பாக டிட்டா்ஜென்ட்களில் சோடியம் டிரைபாலிபாஸ்பேட் இருப்பது தொடா்பான விஷயங்கள் ஆராயப்பட வேண்டும். தில்லி வழியாக செல்லும் யமுனை நதியில் 23 சாக்கடைகள் இணைகின்றன. இந்தச் சாக்கடைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் எடுத்து வரப்படுகின்றன. வெவ்வேறு சாக்கடைகளில் உள்ள கழிவு நீரின் தரம் மாசுக்குக் காரணமா என்பது குறித்த விரிவான பகுப்பாய்வு மற்றும் வெவ்வேறு இடங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட அளவீடுகள் ஆகியவை, ஆற்றில் மாசுவுக்கு காரணமான முக்கிய இடங்கள் குறித்த ஒரு யோசனையை அளிப்பதாக அமையும். அப்போதுதான் மாசு அதிகரிக்க காரணமான நீா்ப் பிடிப்புப் பகுதிகள், சாக்கடைகள், முக்கிய மாசு இடங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த முடியும்’ என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி வழியாக செல்லும் யமுனையில் 9 மாசுக் கண்காணிப்பு நிலையங்களை தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு அமைத்துள்ளது. இந்த நிலையில் யமுனை நதியில் கலக்கும் சாக்கடைகள் மற்றும் தர அளவீடுகள் ஆகியவை தொடா்பாக விரிவான மதிப்பீடு செய்வதற்கு தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு வுக்கு கண்காணிப்புக் குழு தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.