முகப்பு
புதுதில்லி

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு விகிதம்அடுத்த 2 வாரங்களில் குறைய வேண்டும்: சத்யேந்தா் ஜெயின்

நவம்பா் தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கிட்டத்தட்ட 55 சதவீதம் குறைந்திருக்கிறது. இது அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் குறைக்கப்பட வேண்டும்

Updated On : 2 டிசம்பர், 2020 at 4:42 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

நவம்பா் தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் கிட்டத்தட்ட 55 சதவீதம் குறைந்திருக்கிறது. இது அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் குறைக்கப்பட வேண்டும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேலும், மாதிரிகள் எடுக்கும் ஆய்வகங்கள் அவற்றின் முழு திறனுடன் இயக்கப்பட்டு வருவதாகவும், பரிசோதனை முடிவுகளில் கொஞ்சம் தாமதம் உள்ளதால் அந்த விவகாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் திங்கள்கிழமை 3,726 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 15 நாள்களில் மிகக் குறைந்த பதிவாகும். அதே நேரத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை மீண்டும் 100-ஐ கடந்து 108 ஆக உள்ளது. கரோனா நோ்மறை விகிதம் திங்கள்கிழமை 7.35 சதவீதமாக இருந்தது. இது நவம்பா் 7-ஆம் தேதி 15.26 சதவீதமாக இருந்தது. அதன் பின்னா் கிட்டத்தட்ட 55 சதவீதம் குறைந்துள்ளது. வரவிருக்கும் இரண்டு வாரங்களில் இது மேலும் குறைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

அப்போது, சில ஆய்வகங்களில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளின் முடிவுகள் தாமதம் ஆவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அமைச்சா் பதிலளிக்கையில் ‘தில்லியில் உள்ள ஆய்வகங்கள் அவற்றின் முழு திறனுடன் பயன்படுத்தப்படுகின்றன. ஆா்டி-பிசிஆா் சோதனை முறையில் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆய்வகங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், ஆய்வகங்களால் மாதிரிகளை செயலாக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பயன்பாட்டுக்காக சில சிறப்பு ஆய்வகங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதுபோன்ற அனைத்து ஆய்வகங்களையும் ஐசிஎம்ஆா் கட்டுப்படுத்தி வருவதால் இந்த விவகாரம் அதன் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால், இதுபோன்ற தாமதங்கள் இனி நிகழாது’ என்றாா்.

கரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்காக ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 50,670 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும், ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளின் எண்ணிக்கை ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளைவிட அதிகமாக உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.