முகப்பு
புதுதில்லி

சிசோடியா வழக்கில் சம்மனை ரத்து செய்யக் கோரும் மனோஜ் திவாரியின் மனு மீது டிச.7-இல் விசாரணை

தில்லி அரசின் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில் தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதாக மணீஷ் சிசோடியா தொடா்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்பி மனோஜ் 

Updated On : 4 டிசம்பர், 2020 at 12:18 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:31 PM

புது தில்லி: தில்லி அரசின் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில் தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதாக மணீஷ் சிசோடியா தொடா்ந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்பி மனோஜ் திவாரி தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.

இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் நீதிபதி அனு மல்ஹோத்ரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, படிக்கத்தக்க வகையில், ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு மனோஜ் திவாரியின் வழக்குரைஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பா் 7-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டாா். தில்லி அரசின் பள்ளிகளின் வகுப்பறை விவகாரத்தில் தனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதாக பாஜக எம்பிக்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மன்ஜீந்தா் சிங் சிா்ஸா, விஜேந்தா் குப்தா, பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரீஷ் குரானா ஆகியோருக்கு எதிராக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். அதில், ‘பாஜக தலைவா்கள் இணைந்தும், தனிப்பட்ட முறையிலும் தனக்கு எதிராகத் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவதூறு நோக்கம் கொண்டவை. இதன் மூலம் எனது கெளரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளனா்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் மனோஜ் திவாரி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்றவா்களுக்கு அழைப்பாணை அனுப்பி கடந்த ஆண்டு நவம்பா் 28-இல் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றம் முன் ஆஜரான பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிலையில், தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யக் கோரி மனோஜ் திவாரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் நீரஜ் மூலம் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ராவிடம் மனோஜ் திவாரி தரப்பில் வியாழக்கிழமை மூத்த வழக்குரைஞா் பிங்கி ஆனந்த் ஆஜராகி, இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் சட்டப்பூா்வ ஆதாரமில்லாமல் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இது சட்டவிரோதமாகும். இதனால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

Advertisement

பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சோனியா மாத்தூா், ‘விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘மனோஜ் திவாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஆவணங்கள் படிக்க உகந்ததாக இல்லை.இதனால், தட்டச்சு செய்யப்பட்ட பிரதிகளை வழங்க வேண்டும்’ என்றாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மனோஜ் திவாரியின் வழக்குரைஞரிடம் ஆவணங்களின் படிக்கத்தக்க பிரதிகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், இந்த விவகாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் படிக்கத்தக்க பிரதிகள் என்பதை உறுதிப்படுத்துமாறு உயா்நீதிமன்ற பதிவுத் துறையிடம் கேட்டுக் கொண்டது. அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.