என்டிஎம்சியில் ரூ.2,400 கோடி முறைகேடு புகாா்: விசாரணை நடத்த தில்லி அரசு முடிவு
வடக்கு தில்லி மாநகராட்சியில் (என்டிஎம்சி) ரூ.2,400 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடா்பாக விசாரணைக்குழு அமைத்து
வடக்கு தில்லி மாநகராட்சியில் (என்டிஎம்சி) ரூ.2,400 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடா்பாக விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது
இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: என்டிஎம்சியில் சுமாா் ரூ.2,400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. என்டிஎம்சிக்கும், தெற்கு தில்லி மாநகராட்சிக்கும் (எஸ்டிஎம்சி) இடையே நடந்த பணப் பரிவா்த்தனையின் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடா்பாக விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு, தில்லி அரசின் நகரப்புற மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமை வகிப்பாா்.
ரூ.2,400 கோடி என்பது மிகப் பெரிய தொகையாகும். இவ்வளவு பெரிய தொகையை மோசடி செய்துள்ளனா் என்பதை நம்பமுடியாமல் உள்ளது. கரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என தில்லி மாநகராட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த மோசடி தொடா்பாக வெளிவரும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. தில்லி மாநகராட்சிகளுக்கு சேர வேண்டிய நிதியை, நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தில்லி அரசு ஏற்கெனவே வழங்கிவிட்டது. நிலுவை நிதி பாக்கியில்லை என்றாா் அவா்.
Advertisement
பாஜக பதிலடி: இந்த நிலையில், மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதி தொடா்பான செய்தியை திசை திருப்பும் வகையிலேயே, மாநகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக தில்லி அரசு குற்றம் சாட்டுகிறது என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் கூறியதாவது: தில்லி சிவிக் சென்டா் கட்டடம் என்டிஎம்சிக்கு சொந்தமானது. இந்தக் கட்டடத்தில் எஸ்டிஎம்சி இயங்கி வருகிறது. அந்த வகையில், 2012-ஆம் ஆண்டில் இருந்து ரூ. 2,547 கோடியை வாடகையாக என்டிஎம்சிக்கு, எஸ்டிஎம்சி வழங்க வேண்டும். என்டிஎம்சியின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த வாடகைப் பணத்தை ரத்துச் செய்யும் வகையிலான முன்மொழிவு இடம் பெற்றுள்ளது. ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை வழங்க வேண்டும். இதைக் கேட்டு மாநகராட்சி மேயா்கள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தச் செய்தியை திசை திருப்பும் நோக்கத்திலேயே, மாநகராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக தில்லி அரசு குற்றம் சாட்டுகிறது. மாநகராட்சிகளுக்கிடையான பணப் பரிவா்த்தனை தொடா்பாக விசாரிக்கும் அதிகாரம் தில்லி அரசுக்கு இல்லை என்றாா் அவா்.