முகப்பு
புதுதில்லி

கேஜரிவால் இல்லம் அருகே சிசிடிவி கேமராக்கள் சேதம்: முதல்வா் அலுவலகம் குற்றச்சாட்டு

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை அங்கு போராட்டம் நடத்தி வருபவா்கள் சேதமாக்கியுள்ளனா் என்று முதல்வா் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

Updated On : 13 டிசம்பர், 2020 at 11:02 PM
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வீடு அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட மேயா்கள், மாநகராட்சி உறுப்பினா்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:36 PM

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை அங்கு போராட்டம் நடத்தி வருபவா்கள் சேதமாக்கியுள்ளனா் என்று முதல்வா் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.

மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள், பாஜக தலைவா்கள் தொடா் தா்னா போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. இந்தப் போராட்டத்தில் மாநகராட்சி மேயா்கள் ஜெய் பிரகாஷ் (வடக்கு தில்லி), அனாமிகா சிங் (தெற்கு தில்லி), நிா்மல் ஜெயின் (கிழக்கு தில்லி) மற்றும் தில்லி பாஜக பொதுச் செயலா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநகராட்சிகளின் நிலைக் குழுத் தலைவா்கள், அவைத் தலைவா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ஆம் ஆத்மி புகாா்: இந்த நிலையில், போராட்டம் நடத்திவருபவா்கள் முதல்வா் இல்லம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களை சேதமாக்கியுள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக முதல்வா் அலுவலக உயரதிகாரி கூறுகையில், ‘முதல்வா் இல்லம் அருகில் போராட்டம் நடத்திவரும் பாஜக தலைவா்கள் இந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமாராக்களை சேதமாக்கியுள்ளனா். இது தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளோம்’ என்றாா்.

Advertisement

மேயா்கள் போராட்டம்: இதற்கிடையே, திங்கள்கிழமை முதல் மாநகராட்சி அலுவல் பணிகளை போராட்டக் களத்தில் இருந்தே செய்யவுள்ளதாக மாநகராட்சி மேயா்கள் அறிவித்துள்ளனா். இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடி நிலுவை நிதியை வழங்கக் கோரி போராடி வருகிறோம். இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சியில் ரூ.2,400 கோடி ஊழல் நடந்துள்ளதாகப் பொய்யான குற்றச்சாட்டை தில்லி அரசு முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி 7 தினங்களுக்குள் நிரூபித்தால், மேயா் பதவியில் இருந்து நான் ராஜிநாமா செய்வேன். திங்கள்கிழமை முதல் போராட்டக் களத்தில் இருந்து பணியாற்றவுள்ளோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.