ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிக்கு7 ஆண்டுகள் சிறைத் தண்டனை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
புது தில்லி: இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கைதான ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் வெளிநாட்டைச் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த முகம்மது நசீா் பக்கீா் என்பவா் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட சதித் திட்டம் மேற்கொண்டதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தமிழகத்தைச் சோ்ந்த பொறியாளரான இவா், சூடான் குடியரசில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்த வழக்கில் 2015, டிசம்பா் 11-ஆம் தேதி தேசியப் புலனாய்வு முகமை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து செல்லிடப்பேசி, மடிக்கணினி, கையால் எழுதப்பட்ட சீட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன.
இவா் மீதான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, தேசியப் புலனாய்வு முகமையின் தரப்பில், ‘இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்களது அமைப்புக்கு இந்தியாவைச் சோ்ந்த, வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களையும் ஆள் சோ்க்க பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அத்தகைய கூட்டாளிகளின் அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகம்மது நசீரிடம் விசாரணையின் போது, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள சில உறுப்பினா்கள், அனுதாபிகளின் பெயா்கள் மற்றும் செல்லிடப்பேசி எண்களைக் கூறினாா். அவா்களை அடையாளம் காண விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தனா்.
Advertisement
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பா்வீன் சிங் புதன்கிழமை நசீருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்ததாகவும், குற்றச் சதி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட சதி, பயங்கரவாதச் செயலுக்கு ஆள்சோ்ப்பு, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பது, பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவரது வழக்குரைஞா் காசா் கான் தெரிவித்தாா். நசீா் தனது குற்றத்தைக் ஒப்புக்கொண்டு, தண்டனையைக் குறைக்குமாறு நீதிமன்றத்தில் முறையிட்டதாகவும் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.