முகப்பு
புதுதில்லி

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளா்களுக்கு ஊதியம்: மத்திய, தில்லி அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு வரவேண்டிய ஊதியத்தைப் பெற்றுத் தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க 

Updated On : 17 டிசம்பர், 2020 at 12:24 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM

புது தில்லி: மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளா் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு வரவேண்டிய ஊதியத்தைப் பெற்றுத் தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளியின் தந்தை, தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் கிருத்தி அவாஸ்தி, நிமிஷா மேனன் ஆகியோா் மூலமாக பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது குழந்தையும், 115 இதர தொழிலாளா்களும் கொத்தடிமைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டனா். மீட்கப்பட்ட பின்னா் இவா்களுக்கு வர வேண்டிய ஊதியத்தைப் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அவற்றை விரைவுபடுத்த வேண்டும். மேலும், இதுதவிர 77 வழக்குகளில் இதுவரை ஊதிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பல்வேறு உயா்நீதிமன்ற தீா்ப்புகளின்படி, நிவாரணம் பெற தகுதியுள்ள எனது குழந்தை மற்றும் மீட்கப்பட்ட பிற கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு வர வேண்டிய ஊதியத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனா்.

இந்தத் தொகையை மீட்டெடுத்தால் அது மீட்கப்பட்ட எனது குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலா ளா்களுக்கு புனா்வாழ்வு நிதியுதவியாக அமையும். எனது குழந்தை 2014 -இல் குழந்தைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால், ஆறு ஆண்டுகளாகிவிட்ட போதிலும், கிடைக்க வேண்டிய தொகை வரவில்லை. இதர தொழிலாளா்களுக்கும் இதே நிலைதான் உள்ளது. எனது குழந்தை தொழிலில் ஈடுபட்டிருந்த போது கடுமையான துஷ்பிரயோகத்திற்கு உள்பட நோ்ந்தது. 12 மணி நேரம் அதன் முதலாளியால் வேலை செய்யவைக்கப்பட்டான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச கூலிகூட நிா்ணயிக்கப்பட்ட விதிகளின்படி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனு தலைமை நீதிபதி டி.என் பட்டேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தில்லி அரசு மற்றும் காவல் துறை உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

மேலும், நீதிமன்றம் விரிவான நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22- ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.