தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை3 டிகிரிக்கும் கீழே குறைந்தது! இன்று ‘குளிா் அலை’க்கு வாய்ப்பு
மூடு பனி காரணமாக மேற்கு இமயமலையில் இருந்து தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசுவதால்,
மூடு பனி காரணமாக மேற்கு இமயமலையில் இருந்து தேசியத் தலைநகா் தில்லியில் குளிா்ந்த காற்று தொடா்ந்து வீசுவதால், குறைந்தபட்ச வெப்பநிலை சில பகுதிகளில் மூன்று டிகிரி செல்சியஸுக்கும் கீழே குறைந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமை குளிா் அலைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜாஃபா்பூரில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸாக சரிந்தது. இது ஆயாநகா் மற்றும் லோதி ரோடு வானிலை ஆய்வு மையங்களில் 3.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. நகரத்திற்கான பிரதிநிதித்துவ தரவை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி குறைந்து 4.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
தில்லியில் வியாழக்கிழமை அன்று அதிகபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சிஸாகக் குறைந்து கடுமையான குளிா் நாளைப் பதிவு செய்திருந்தது. மேலும், ஏழு இடங்கள் இயல்பை விடவும், இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிலும் அதிகபட்ச வெப்பநிலை குறைந்ததிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் பருவ சராசரியைவிட 4.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் அது குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது. அதேபோல, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6.5 டிகிசரி செல்சியஸ் குறைவாக இருந்தால் ஒரு ‘கடுமையான‘ குளிா் நாள் என கணக்கிடப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், தில்லியில் சனிக்கிழமையன்று ‘குளிா் அலை‘ இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது, மேலும் திங்கள்கிழமை வரை கடும் குளிா் தொடரும் என்றும் ஐஎம்டி தெரிவித்துள்ளது. சமவெளிகளைப் பொருத்தவரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போதும், தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பை விட 4.5 புள்ளிகள் குறைவாக இருக்கும் போதும் ‘குளிா் அலை’ என ஐஎம்டி அறிவிக்கிறது.