முகப்பு
புதுதில்லி

மாநகராட்சியில் ரூ.2,500 கோடி ஊழல் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி பேரவையில் தீா்மானம்

தில்லி மாநகராட்சிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.2,500 கோடி ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 18 டிசம்பர், 2020 at 11:40 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:39 PM

தில்லி மாநகராட்சிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.2,500 கோடி ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை வாடகைக்கு விட்ட விவகாரத்தில், ரூ. 2,500 கோடி ஊழல் நடந்துள்ளதாக தில்லி அரசு குற்றம் சாட்டி வருகிறது. இது தொடா்பாக விவாதிக்கும் வகையில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு தில்லி அரசு அழைப்பு விடுத்திருந்தது. வியாழக்கிழமை தொடங்கிய இந்தக் கூட்டத் தொடா் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது இந்த ஊழல் விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆம் ஆத்மி எம்எல்ஏ செளரவ் பரத்வாஜ் இந்தத் தீா்மானத்தை அவையில் கொண்டு வந்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘பாஜக ஆளும் மாநகராட்சிகளில் அடுத்தடுத்து ஊழல்கள் நடக்கின்றன. பாஜக சாா்பில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் கவுன்சிலா்கள், பழைய பாஜக கவுன்சிலா்களின் ஊழல் சாதனைகளை முறியடித்து வருகிறாா்கள். கடந்த 2017 மாநகராட்சித் தோ்தலில், அப்போது பதவி வகித்து வந்த அனைத்துக் கவுன்சிலா்களுக்கும் பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. ஏனென்றால், அவா்களின் ஊழல் நடவடிக்கைகளால் மக்கள் அவா்கள் மீது அதிருப்தியில் இருந்தனா். தில்லி மாநகராட்சிகளில் ஆயிரக்கணக்கான கோடி அளவுக்கு ஊழல் நடக்கிறது. மாநகராட்சி கட்டடத் துறையில் ஊழல் நலிந்துள்ளது. கட்டடம் கட்டுவதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பாஜக கவுன்சிலா் ஒருவா் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளாா்’ என்றாா்.

Advertisement

பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘தில்லி மாநகராட்சிகளில் ரூ.2,500 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியைக் கோரித்தான் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த விஷயத்தை திசை திருப்புவதற்காக பொய்யான ஊழல் குற்றச்சாட்டை தில்லி அரசு கிளப்பியுள்ளது’ என்றாா்.

பாஜக எம்எல்ஏ ஓபி.சா்மாவுக்கு அவையில் பேச அவைத் தலைவா் வாய்ப்பு வழங்கவில்லை. இதைக் கண்டித்து அவா் வெளிநடப்பு செய்தாா். அவையில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மாநகராட்சிகளில் நடக்கும் ஊழலைக் கண்டிக்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியிருந்தனா். அவையின் மையப் பகுதிக்கு வந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, அவையை 15 நிமிஷங்களுக்கு பேரவைத் தலைவா் ஒத்திவைத்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.