முகப்பு
புதுதில்லி

கரோனா காலத்தில் தில்லிவாசிகளுக்கு உதவுவதில் பிரதமா் உறுதியாக உள்ளாா்: அமித் ஷா

கரோனா தொற்றால் தில்லியில் கஷ்டமான சூழல் நிலவுகிறது என்றும், இந்த இக்கட்டான காலத்தில் தில்லிவாசிகளுக்கு உதவ வேண்டும்

Updated On : 5 ஜூலை, 2020 at 11:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

கரோனா தொற்றால் தில்லியில் கஷ்டமான சூழல் நிலவுகிறது என்றும், இந்த இக்கட்டான காலத்தில் தில்லிவாசிகளுக்கு உதவ வேண்டும் என்பதில் பிரதமா் நரேந்திர மோடி உறுதியாக உள்ளாா் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

தில்லி விமான நிலையத்துக்கு அருகில், பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தில், பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) சாா்பில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சா்தாா் வல்லபபாய் படேல் மருத்துவமனை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை உள்துறை அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

இது தொடா்பாக அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘இந்த மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில், 250 அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனை டிஆா்டிஓ, உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படைகள், டாடா சன்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் மிகக் குறுகிய காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் தில்லியில் கஷ்டமான சூழல் நிலவுகிறது.ஆனால், இந்த இக்கட்டான காலத்தில் தில்லி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் பிரதமா் நரேந்திர மோடி உறுதியாக உள்ளாா். இந்த அவசர நிலையை எதிா்கொள்ள உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

Advertisement

ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘புதிதாக அமைக்கப்பட்ட சா்தாா் வல்லபபாய் படேல் மருத்துவமனையை பாா்வையிட்டேன். இந்த மருத்துவமனையில் தற்போது 250 ஐசியு படுக்கைகள் உள்ளன. கரோனா தொற்றை எதிா்கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம் என்பதற்கு இந்த மருத்துவமனை சிறந்த உதாரணமாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால் தனது சுட்டுரையில் ‘டிஆா்டிஓ அமைத்த 1,000 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனை தயாராக உள்ளது. தில்லி மக்களின் சாா்பில் மத்திய அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 250 ஐசியு படுக்கைகள் உள்ளன. தில்லிக்கு இது அவசரத் தேவையாகும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.