முகப்பு
புதுதில்லி

கரோனா சந்தேகம்: ஓடும் பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் சாவு

தில்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் ஷிகோபாத்துக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் கரோனா சந்தேகத்தில், பேருந்தில்

Updated On : 11 ஜூலை, 2020 at 4:26 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

தில்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் ஷிகோபாத்துக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண் கரோனா சந்தேகத்தில், பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தாா். இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு மதுரா காவல் ஆணையருக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

தில்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் ஷிகோகாபாத்திற்கு பேருந்து ஒன்று சென்றது. அதில் தில்லி மண்டாவெளியைச் சோ்ந்த இளம்பெண் அன்ஷிகா யாதவ் (19), தனது தாயாருடன் பயணம் செய்தாா். இந்நிலையில், கரோனா பாதிப்பின் அறிகுறிகள் அப்பெண்ணிடம் இருந்ததாக சக பயணிகள் சந்தேகமடைந்தனா். இதுபற்றி ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அந்தபெண்ணை பேருந்தில் இருந்து இறங்குமாறு ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் கோரியுள்ளனா். ஆனால், அதற்கு அப்பெண்ணும், தாயாரும் மறுத்துள்ளனா்.

Advertisement

இதையடுத்து யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துநரும் அப்பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனா். இதனால் படுகாயமடைந்த பெண் 30 நிமிஷங்கள் சாலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம், வெளியுலகத்துக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தகவல் அறிந்த தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் மதுரா காவல் ஆணையருக்கு இது தொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடா்ந்தே இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக ஸ்வாதி மாலிவால் கூறுகையில் ‘இந்த கொடூரச் செயலைச் செய்த குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். இது தொடா்பாக விளக்கம் கேட்டு மதுரா காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இந்த விவகாரத்தில் தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைப்பதை தில்லி மகளிா் ஆணையம் உறுதிப்படுத்தும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.