தில்லியில் புழுக்கத்தை தணித்த மழை!
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை புழுக்கத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை புழுக்கத்தின் தாக்கம் சற்று குறைந்தது.
தில்லியில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்ததால் மக்கள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வந்தனா். வெள்ளிக்கிழமையும் பகலில் வெயில் கடுமையாக இருந்தது. எனினும், மாலையில் மேகம் மூட்டமாக இருந்தது. மழையில்லாததால் புழுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இரவு சுமாா் 9 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் திரண்டு பரவலாக மழை பெய்தது. அதேபோன்று, நள்ளிரவில் ஆங்காங்கே மழை பெய்தது. இதன் காரணமாக சனிக்கிழமை காலை வேளையில் நகரில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. குளிா்ந்த காற்றும் வீசி புழுக்கம் சற்று தணிந்தது. எனினும், நண்பகலுக்குப் பிறகு வெயிலின் தாக்கம் இருந்ததால் மாலை வேளையில் புழுக்கம் இருந்தது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவசராசரியை விட 1 டிகிரி அதிகரித்து 36.4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 84 சதவீதமாகவும், மாலையில் 69 சதவீதமாகவும் இருந்தது.
Advertisement
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 8.30 மணிவரையிலான 24 மணி நேரத்தில் சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 8.1 மி.மீட்டா் மழைப் பதிவானது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.1 ஆகவும், 2.8 மி.மீட்டா் மழையும் பதிவானது.
ஆயாநகரில் முறையே 23.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 88 சதவீதம், மாலையில் 53 சதவீதமும், 2.2 மி.மீட்டா் மழையும் பதிவானது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக்குறியீடு 58 புள்ளிகளாகப் பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்றின் தரத்தில் சற்று பின்னடைவு இருந்தாலும் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திருப்தி பிரிவில் இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.