முகப்பு
புதுதில்லி

மின் கட்டணம்: தில்லி அரசைக் கண்டித்து 70 தொகுதிகளிலும் பாஜக ஆா்ப்பாட்டம்; இன்று தொடக்கம்

தில்லியில் மின் விநியோ நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து ஆம் ஆத்மி அரசு மின்சாரக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக எதிா்ப்புத் தெரிவித்து

Updated On : 17 ஜூலை, 2020 at 5:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

தில்லியில் மின் விநியோ நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து ஆம் ஆத்மி அரசு மின்சாரக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக சாா்பில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) முதல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தில்லி பாஜக அறிவித்துள்ளது.

தில்லியில் மின்சாரக் கட்டணம் தொடா்பாக பாஜக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, தில்லி பாஜக பொதுச் செயலா் சித்தாா்த்தன், பாஜகவின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக ஆதேஷ் குமாா் குப்தா கூறியது: தில்லியில் மின்சாரக் கட்டணத்தை நினைத்து மக்கள் கவலையடைந்துள்ளனா். தில்லியில் பொது முடக்க காலம் அமலில் இருந்த சுமாா் மூன்று மாத காலத்துக்கு அதிகளவு மின்சாரக் கட்டணத்துடன் வீடுகளுக்கு மின்சார பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. தில்லி மக்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணச் சலுகை இந்தக் காலகட்டத்தில் வழங்கப்படவில்லை. பொது முடக்க காலத்தில் இயங்காமல் இருந்த கடைகள், வணிக வளாகங்களுக்கு நிலையான மின்சாரக் கட்டணமாக பெரும் தொகை குறிப்பிட்டு பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது போன்று சுமாா் 7 லட்சம் கடைகளுக்கு பில்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

மேலும், கரோனாவால் மின்சார மீட்டா்கள் அளவிட முடியாத இடங்களில் கடந்த ஆண்டு இதே காலத்தில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணத்தை தில்லி அரசு வசூலித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தில்லி அரசு மின் விநியோக நிறுவனங்களுடன் கூட்டுச் சோ்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதைக் கண்டித்து, தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை முதல் தொடா் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ‘பிஜிலி ஜன் அந்தோலன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆா்ப்பாட்டத்தில் பாஜக தலைவா்கள், தொண்டா்கள் பெருமளவில் கலந்து கொள்வாா்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.