முகப்பு
புதுதில்லி

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கோரிய தொல்.திருமாவளவன் மனு தள்ளுபடி

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2006-ஆம் ஆண்டு சட்டப்படி உரிய இடஒதுக்கீடோ அல்லது

Updated On : 21 ஜூலை, 2020 at 11:20 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:28 PM

மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2006-ஆம் ஆண்டு சட்டப்படி உரிய இடஒதுக்கீடோ அல்லது சிறப்புச் சலுகைகளையோ வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள, 2005-ஆம் ஆண்டு வழக்கு எவ்விதத்திலும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(4), பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையாக இல்லை என்றும், சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கும் 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி மருத்துவப் படிப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், மத்திய தொகுப்பு இடங்களைப் பகிா்ந்தளிப்பது தொடா்பாக மத்திய அரசு சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்தை வகுத்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ். ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு, திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, பிரசன்னா ஆகியோா் ஆஜராகினா். மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்தியாவுக்கான விவகாரமாகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு உரிய இடங்கள் அளிக்கப்படவோ, சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவோ இல்லை. ஆனால், இந்த மனு மற்ற மனுக்களில் இருந்து வேறுபட்டதாகும்’ என்றாா்.

Advertisement

அப்போது, இதே போன்ற விவகாரம் தொடா்புடைய மனுதாரா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகியிருக்கும் போது நீங்கள் ஏன் இங்கு வந்தீா்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.