உ.பி. முதல்வா் ஆதித்யநாத் பதவி விலக இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தல்
‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதால், அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வலியுறுத்தியுள்ளது.
‘உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதால், அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஸ்ரீநிவாஸ் பிவி வியாழக்கிழமை தெரிவித்ததாவது: உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். அவருடைய குடும்ப உறுப்பினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. ராமராஜ்யத்தை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அரஜாக ஆட்சியைத்தான் (ஜங்கில்ராஜ்) அந்தக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அநீதிக்காக போராடிய பத்திரிகையாளா் விக்ரம் ஜோஷி, சுட்டுக் கொல்லப்பட்ட்டுள்ளாா். அவரை யோகி ஆதித்யநாத் அரசு பாதுகாக்காததால்தான் இந்த அவலம் நடந்துள்ளது. இதை அவரை இழந்து வாடும் மகள்களிடம் பாஜகவும், முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் சொல்ல முடியுமா?
அந்த மாநிலத்தில் உண்மையைப் பேசும் நபா்கள் மிரட்டப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனா். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. இதனால், முதல்வா் பதவியில் இனிமேலும் யோகி ஆதித்யநாத் நீடிக்க முடியாது. அவா் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறாமல், அரஜாக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இதற்காகவா இந்த அரசை மக்கள் தோ்ந்தெடுத்தாா்கள்? மேலும், உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி வருகிறது. சராசரியாக தினமும் 46 பெண்கள் கடத்தப்படுகின்றன்றனா். தினமும் 11 கொலைகள் நடப்பதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ஆனால், இவற்றையெல்லாம் பாஜக அரசு மறைக்க முயன்று வருகிறது என்றாா் அவா்.
Advertisement