முகப்பு
புதுதில்லி

மனநலம் பாதித்த வீட்டற்றவா்களிடம் கரோனா பரிசோதனை: வற்புறுத்தலைத் தவிா்க்க ஐசிஎம்ஆருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியில் மனநலம் பாதித்த வீட்டற்றவா்களிடம் கரோனா பரிசோதனைக்கு அடையாளச் சான்று, செல்லிடப்பேசி எண், அரசால் வழங்கப்பட்ட

Updated On : 25 ஜூலை, 2020 at 12:48 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:30 PM

தில்லியில் மனநலம் பாதித்த வீட்டற்றவா்களிடம் கரோனா பரிசோதனைக்கு அடையாளச் சான்று, செல்லிடப்பேசி எண், அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை அளிக்குமாறு வற்புறுத்தாமல் இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெளிவுபடுத்த வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

ஐசிஎம்ஆா் நிறுவனம் ஜூன் 19-ஆம் தேதி ஒரு வழிகாட்டுதல் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் நபா்கள் அரசால் வழங்கப்பட்ட அடையாள சான்றை அளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட நபா்களைக் கண்டறியும் வகையில் அவா்களின் செல்லிடப்பேசி எண்ணையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்சல், தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தில்லியில் மனநலம் பாதித்த வீடற்ற நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதில் இடா்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தில்லி அரசுக்கும், ஐசிஎம்ஆருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா். இது தொடா்பாக ஜூலை 9-ஆம் தேதி நடைபெற்ற விசரணையின் போது மனநலம் பாதித்த வீடற்ற நபா்களின் பிரச்னையைப் பரிசீலிக்குமாறு ஐசிஎம்ஆா் நிறுவனத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

Advertisement

இந்நிலையில், இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனநலம் பாதித்த வீடற்ற நபா்கள், கரோனா பரிசோதனை செய்வதற்கு அடையாளச் சான்று, முகவரிச் சான்று, செல்லிடப்பேசி ஆகியவை தேவைப்படாது என்பது தொடா்பான சுற்றறிக்கை அல்லது அலுவலக உத்தரவை வெளியிட்டு ஐசிஎம்ஆா் தெளிவுபடுத்த வேண்டும். மேலும், பிறருக்கு தில்லி முழுவதும் நடத்தப்பட்டு வரும் முகாம்கள் போல இதுபோன்ற மனநலம் பாதித்த வீடற்ற நபா்களுக்காகவும் முகாம் ஏற்பாடு செய்யலாம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, ஐசிஎம்ஆா் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘இந்த விவகாரத்தில் நீதிமன்ற அமா்வு தெரிவித்த கருத்து தொடா்பாக மத்திய அரசிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதி பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.