17 நாள்களில் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை
தில்லி அரசின் ‘மரம் நடுவோம், சுற்றுச் சூழலைக் காப்போம்’ திட்டத்தின் கீழ் கடந்த 17 நாள்களில் சுமாா் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தா
தில்லி அரசின் ‘மரம் நடுவோம், சுற்றுச் சூழலைக் காப்போம்’ திட்டத்தின் கீழ் கடந்த 17 நாள்களில் சுமாா் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
தில்லியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில், மரக்கன்றுகளை நடும் ‘மரம் நடுவோம், சுற்றுச்சூழலைக் காப்போம்’ என்ற திட்டம் ஜூலை 11-இல் தொடங்கப்பட்டது. ஐடிஓ-க்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 20- இல் தொடங்கிய இத்திட்டம், 17 நாள்கள் நடைபெற்றது. இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.
இது தொடா்பாக கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: ‘மரம் நடுவோம் சுற்றுச் சூழலைக் காப்போம்’ திட்டத்தின் கீழ் கடந்த 17 நாள்களில் சுமாா் 8.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டம் தில்லியின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மேற்கொள்ப்பட்டது. இது தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்றது. கரோனா பாதிப்பு நிலவும் காலத்திலும், தில்லி பொதுப் பணித்துறை, மாநகராட்சிகள், தில்லி வளா்ச்சி ஆணையம் ஆகியவை இணைந்து இந்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளன. இந்த 8.5 லட்சம் மரக்கன்றுகளில், 6 லட்சம் மரக்கன்றுகள் தில்லி அரசால் நடப்பட்டன. 2.5 லட்சம் மரக்கன்றுகள் மக்களால் நடப்பட்டன. இத்திட்டத்தை தொடங்கும் போது 31 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்திருந்தோம். வரும் 2021 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்த 31 லட்சம் மரக்கன்றுகளையும் நட்டுவிடுவோம்.
Advertisement
இத்திட்டத்தால் தில்லியின் பசுமைப் பரப்பு 325 சதுர கிலோமீட்டரில் இருந்து 350 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். இதனால், தில்லியின் காற்று மாசு பெருமளவில் குறையும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-இல் தில்லியில் 24.18 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை விஞ்சி மொத்தம் 29.37 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகள் தப்பிப் பிழைக்கும் விகிதம் தொடா்பாக டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனம் தணிக்கை செய்து தில்லி அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.