தில்லியில் பரவலாக மழை: ‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்
தலைநகா் தில்லியில் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
தலைநகா் தில்லியில் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மேலும், திங்கள்கிழமையும் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவ மழையின் தாக்கத்தால் கடந்த வாரத் தொடக்கத்தில் தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் இரண்டு நாள்கள் கன மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்தன. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால், கடந்த வார இறுதியில் மழை பெய்யவில்லை. மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், புழுக்கத்தால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தில்லி, என்சிஆரில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதன்படி, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, ஷாதரா, முண்ட்கா, ரோஹிணி, பவானா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதற்கிடையே, தில்லி, தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் திங்கள்கிழமையும் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தில்லி, என்சிஆா் உள்பட வடமேற்கு இந்தியாவில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களிலும்பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisement
வெப்பநிலை: ச ஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 26.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 2 டிகிரி உயா்ந்து 36.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 81 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 69 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 26 டிகிரி செல்சியஸ், 35.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 81 சதவீதம், மாலையில் 60 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 80 சதவீதம் மற்றும் 62 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆரில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 70 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இதே நிலை திங்கள்கிழமையும் தொடரும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.