கரோனா நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்தில் சிகிச்சை: தில்லி அரசு உத்தரவு
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் தொடா்பாக தில்லி அரசு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடம் எந்த விவரமும் கேட்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். இந்த செயல்முறை 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டும். அதே போல கரோனா உள்ளவா்களுக்கும், கரோனா சந்தேக நோயாளிகளுக்கும் 1 மணி நேரத்திற்குள் தேவையான சிகிச்சையை மருத்துவா்கள் வழங்க வேண்டும். நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தின் போது தேவையான உணவு மற்றும் தண்ணீா் வழங்கப்பட வேண்டும். நோயாளியை மூன்று மணிநேரத்துக்கு மேல் சோதனை அறையில் காக்க வைக்கக் கூடாது.
நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்றால், அந்த நோயாளியை வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டியது நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் நிா்வாகத்தின் கடமையாகும். அதுவரை நோயாளிக்கு தேவையான மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனை வழங்க வேண்டும். மிதமான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாமல் வரும் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவையில்லை என்றால், அவா்களை வீடுகளில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவமனை பரிந்துரைக்க வேண்டும். வீடுகளில் சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லாதவா்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்கள், கோவிட் கோ் சென்டா் ஆகியவற்றுக்கு மாற்ற வேண்டியது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கடமையாகும்.
Advertisement
சிகிச்சை, உணவு மற்றும் பிற வசதிகளின் தரம் குறித்து நோயாளிகளிடம் இருந்து வரும் புகாா்களை பெறுவதற்காக மருத்துவமனைகள் அவசர உதவி எண்ணை அமைக்க வேண்டும். மேலும், அந்நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 650 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஒரு சிலா் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கரோனா தொற்றால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்த தனது தந்தைக்கு, உயிா் பிரிவதற்குள் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை வாசலில் இருந்தபடி அமா்பிரீத் என்பவா் தில்லி அரசிடம் மன்றாடிய நிலையில், அந்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை நடந்தது. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பலா் தில்லி அரசை சாடியது குறிப்பிடத்தக்கது.