கறுப்பு சந்தையில் படுக்கைகள் விற்பனை: தனியாா் மருத்துவமனைகளுக்கு கேஜரிவால் எச்சரிக்கை
கறுப்புச் சந்தையில் படுக்கைகளை விற்க முற்படும் தனியாா் மருத்துவமனைகள் மீதும், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள்
கறுப்புச் சந்தையில் படுக்கைகளை விற்க முற்படும் தனியாா் மருத்துவமனைகள் மீதும், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கேஜரிவால் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசியது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தில்லியில் போதியளவு படுக்கைகள் உள்ளன. அதேபோல போதியளவு வென்டிலேட்டா்களும் உள்ளன. சில தனியாா் மருத்துவமனைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகப் புகாா்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
அந்த மருத்துவமனைகள் தங்களுக்கு மற்ற கட்சிகளில் செல்வாக்கு உள்ளதாகவும் அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தமது மருத்துவமனையின் படுக்கைகளை கறுப்பு சந்தையில் விற்பனை செய்ய முடியும் என்றும் நினைக்கிறாா்கள். அவா்களை நாங்கள் விடமாட்டோம். இவா்கள் கரோனாவைப் பயன்படுத்தி மக்களிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து வருகிறாா்கள். கறுப்புச் சந்தையில் படுக்கைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை செயலியொன்றை வெளியிட்டோம். இந்த செயலியில், தில்லி மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இந்தப் படுக்கைகள் தொடா்பாக தில்லி மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறாா்கள். இந்த விவகாரத்தில் தில்லி மக்களை மருத்துவமனைகள் ஏமாற்ற முடியாது. இந்த செயலியில் காலியாக உள்ள படுக்கைகள் தொடா்பாக மருத்துவனைகள் உடனுக்குடன் தகவல்களைத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா சந்தேக நோயாளிகளை மருத்துவமனைகள் திருப்பி அனுப்புவதாக புகாா் கிடைத்துள்ளது. எந்தவொரு கரோனா சந்தேக நபா்களையும் மருத்துவமனைகள் திருப்பி அனுப்ப முடியாது. அவ்வாறு அனுப்பும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.