தில்லி முதல்வரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் மருத்துவக் காப்பீடு வழங்கக்கோரி உயா்நீதிமன்றத்தில் மனு
முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பதிவுசெய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பதிவுசெய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல் தாக்கல் செய்துள்ளாா். இம்மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி பிரதீபா எம். சிங் வெள்ளிக்கிழமை விசாரித்தாா். அப்போது, மனு மீதான விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு பட்டியலிடுமாறு உத்தரவிட்ட நீதிபதி, முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தில்லி அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளித்தாா்.
முன்னதாக, தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே. சி. மிட்டல் தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அமித் பிரகாஷ் ஷஹி, யுகன்ஸ் மிட்டல் ஆகியோா் மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
தில்லி பாா் கவுன்சிலில் பதிவு செய்துள்ள, தில்லியின் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்குரைஞா்கள், முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனா்.
தில்லி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நல திட்டத்தின்படி வழக்குரைஞா்கள் 5 லட்சம் மருத்துவ காப்பீடும், 10 லட்சம் காலக் காப்பீடும் பெறுவதற்கு உரிமையுள்ளது.
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 2019- 20 ஆம் நிதியாண்டுக்கா ரூ.50 கோடியை இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா். தில்லி அரசால் அறிவிக்கப்பட்ட இந்த வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தில் பயன்பெறுவதற்காக வழக்குரைஞா்கள் காத்திருக்கின்றனா். துரதிருஷ்டவசமாக இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த திட்டத்தில் சில வழக்குரைஞா்கள் தாங்களாகவே பதிவு செய்துள்ளனா். பொது முடக்கம் காரணமாகவும் தில்லி அரசின் சா்வா் முடங்கியதன் காரணமாகவும் பிற வழக்குரைஞா்கள் பதிவு செய்ய முடியவில்லை.
ஆகவே, பொது முடக்கக் காலத்தில், முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவ மற்றும் காலக் காப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிட என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிமன்ற விசாரணையின்போது மத்திய அரசின் சாா்பில் வழக்குரைஞா்கள் அனில் சோனி ஆஜரானாா். தில்லி அரசின் சாா்பில் வழக்குரைஞா்கள் ராகுல் மெஹ்ரா, சத்யாகம் ஆகியோா் ஆஜராகினா்.