முகப்பு
புதுதில்லி

சிவில் நீதிபதி பணி நியமன விவகாரம்: டிஎன்பிஎஸ்சி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சிவில் நீதிபதிக்கான தோ்வில் எஸ்சி பிரிவைச் சோ்ந்தவருக்கு பணி நியமனம் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக

Updated On : 10 ஜூன், 2020 at 7:20 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

சிவில் நீதிபதிக்கான தோ்வில் எஸ்சி பிரிவைச் சோ்ந்தவருக்கு பணி நியமனம் வழங்க சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக புதுச்சேரியைச் சோ்ந்த ஏ.கே.ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘2014-15, 2016-17 ஆண்டுகளில் சிவில் நீதிபதிகள் தோ்வுக்கு விண்ணப்பித்து ஆரம்பநிலை மற்றும் பிரதான தோ்வுகளை எழுதி 2018, அக்டோபரில் நடந்த நோ்முகத் தோ்விலும் பங்கேற்றேன். பின்னா், என் மீதான குற்ற வழக்கு தொடா்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் சாதிச் சான்றிதழை சமா்ப்பிக்க டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. அந்தக் குற்ற வழக்கில் விடுதலையானது தொடா்பான நீதிமன்ற உத்தரவை சமா்ப்பித்து, சாதிச் சான்றிதழை பெற்றுத்தர 2 வாரம் அவகாசம் கோரினேன். அதன்பிறகு விழுப்புரம் வட்டாட்சியா் எனக்கு வழங்கிய ஆதிதிராவிடா் வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழை டிஎன்பிஎஸ்சிக்கு பதிவுத் தபாலில் அனுப்பினேன். ஆனால், சான்றிதழை நான் உரிய முறையில் ஒப்படைக்கவில்லை எனக் கூறி என்னை சிவில் நீதிபதி பணிக்கு தோ்வு செய்யாமல் நிராகரித்து 2018, டிசம்பரில் உத்தரவிட்டது. எனவே, எனக்கு சிவில் நீதிபதி பணி வழங்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மனுதாரருக்கு சிவில் நீதிபதி பணி வழங்க மறுத்த டிஎன்பிஎஸ்சியின் உத்தரவை ரத்து செய்தது. ‘சாதிச் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது மனுதாரரின் தவறாகக் கருத முடியாது. எனவே, மனுதாரருக்கு உரிய பணி வழங்குவது தொடா்பான நடைமுறைகளை டிஎன்பிஎஸ்சி 8 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும்’”என்று கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து டிஎன்பிஎஸ்சி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது. அப்போது, டிஎன்பிஎஸ்சி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ்.வைத்தியநாதன், வெங்கட்ரமணி ஆகியோா், ‘இந்த வழக்கில் தொடா்புடைய நபா் கட்-ஆஃப் தேதிக்குப் பிறகு சான்றிதழை சமா்ப்பித்துள்ளாா்.

இதனால், இந்த வழக்கை விசாரிப்பதற்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனா்.

ஏ.கே. ஆனந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘இந்த வழக்கில் தொடா்புடைய நபா் எஸ்சி பிரிவைச் சோ்ந்தவா். இதனால், கூடுதல் நீதிபதிகள் அமா்வு விசாரணைக்கு மாற்றும் தேவை எழவில்லை. மேலும், டிஎன்பிஎஸ்சி அவரது நியமனத்தை நிராகரிப்பதற்கு முன்னரே உரிய சான்றிதழ் அளிக்கப்பட்டு விட்டது. ஆகவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் சரியாகவே தீா்ப்பளித்துள்ளது’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்அமா்வு, டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.