முகப்பு
புதுதில்லி

காலிப் படுக்கைகள், கட்டண விவரங்கள்: தில்லி மருத்துவமனைகளில் தகவல் பலகை வைக்க உத்தரவு

தில்லியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் முக்கிய மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகள் விவரம்,

Updated On : 11 ஜூன், 2020 at 7:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

தில்லியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் முக்கிய மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகள் விவரம், சிகிச்சைக் கட்டண விவரம், யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்களை ஒளிரும் விளக்குகளுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலா் விஜய்தேவுக்கு துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், நா்ஸிங்ஹோம், கிளினிக்குகள் ஆகியவற்றஇல் காலியாக இருக்கும் படுக்கைகள் விவரம், சிகிச்சைக் கட்டண விவரம், யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்களை ஒளிரும் விளக்குகளுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்படுவதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும். கரோனா சிகிச்சைக்கு எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன. இதர சிகிச்சைகளுக்கு எவ்வளவு படுக்கைகள் உள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் வெளிப்படத் தன்மை வேண்டும் என்பதாலும், மக்களுக்கு மருத்துவ வசதிகளிகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தகவல் பலகையில் தெரிவிக்கப்படும் விவரங்களும், தில்லி அரசு இதற்கென ஏற்படுத்தியுள்ள செயலியில் தெரிவிக்கப்படும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால், தில்லி பேரிடா் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையிலியே நோய்த் தொற்று இருப்பவா்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி மறுக்கக்கூடாது. அவா்களிடம் அதிக கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என்றும் அவா் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக முதல்வா் கேஜரிவால், தில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் வெளிமாநில மக்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற துணை நிலை ஆளுநரின் உத்தரவு முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா். தில்லி மருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அண்மையில் முதல்வா் கேஜரிவால் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவை துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் அதிரடியாக மாற்றியமைத்தாா். இதையடுத்து, தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், துணை நிலை ஆளுநரின் உத்தரவு மிகுந்த சவால் நிறைந்தது என்று கேஜரிவால் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.