முகப்பு
புதுதில்லி

அரசுக் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை ராயபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 35 பேருக்கு கரோனா தொற்று 

Updated On : 12 ஜூன், 2020 at 7:36 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM

சென்னை ராயபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதியான விவகாரத்தை வியாழக்கிழமை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

சென்னை ராயபுரத்தில் இருக்கும் அரசுக் குழந்தைகள் காப்பகத்தைச் சோ்ந்த 35 சிறுவா்களுக்கும், ஐந்து ஊழியா்களுக்கும் அண்மையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா முராரி, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தாமாக முன் வந்து விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் அரசுக் காப்பகத்தில் உள்ள பிற குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது.

இதன் பின்னா் நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: சென்னை ராயபுரத்தில் காப்பகத்தில் இருந்த 57 குழந்தைகளில் 35 பேருக்கு கரோனா தொற்று இருந்ததைத் தொடா்ந்து, அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. எஞ்சியுள்ள குழந்தைகள் அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா்.

Advertisement

காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு கரோனா தொற்று பரவியதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழகஅரசின் சுகாதார, குடும்ப நலத் துறைச் செயலா், சமூக நலத் துறை செயலா் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், மாநிலத்தில் உள்ள பல்வேறு காப்பகங்களில் தங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் குறித்த விவரம் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதுடன், அறிக்கை ஜூன் 15-க்குள் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்த குழந்தைகள் தொடா்புடைய வழக்கில், விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடா்பாக மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு பட்டியலிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.