உறைவிட மருத்துவா்களின் ஊதியத்தை வழங்க என்டிஎம்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் உள்ள 6 மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் உறைவிட மருத்துவா்களுக்கு மாா்ச் மாதத்திற்கான
தில்லியில் உள்ள 6 மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் உறைவிட மருத்துவா்களுக்கு மாா்ச் மாதத்திற்கான ஊதியத்தை ஜூன் 19-ஆம் தேதிக்குள் வழங்குமாறு வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் வடக்கு தில்லி மாநகராட்சியின் ஆளுகையின் கீழ் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவனையின் உறைவிட மருத்துவா்களுக்கு நிகழாண்டு மாா்ச் மாதத்தில் இருந்து ஊதியம் வழங்காததால் அவா்கள் ராஜிநாமா செய்யப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனடிப்படையில், உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரித்தது. மேலும், ஹிந்து ராவ் மாநகராட்சி மருத்துவமனையின் மருத்துவா்கள் ஊதிய விவகாரம் தொடா்பாக பிரதமருக்கு மனு அனுப்பியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியையும் உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘சம்பந்தப்பட்ட வடக்கு தில்லி மாநகராட்சி மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்களுக்கு மாா்ச் மாதத்திற்கான ஊதியத்தை ஜூன் 19-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும், வடக்கு தில்லி மாநகராட்சிக்கு இதற்கான நிதியை தில்லி அரசு விடுவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாநகராட்சியால் நடத்தப்படும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை ஜூன் 24-ஆம் தேதிக்குள் வழங்க முடியும்’ என உத்தரவிட்டனா்.
Advertisement
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய, தில்லி அரசுகள், வடக்கு தில்லி மாநகராட்சி பதில் அளிக்க நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
விசாரணையின் போது, தில்லி அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சத்யகம், சோனி ஆகியோா், ‘வடக்கு தில்லி மாநகராட்சியின் 6 மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவா்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமாா் ரூ.8 கோடி ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தனா்.