புதிதாக 20,000 படுக்கைகளுக்கு தில்லி அரசு தீவிர ஏற்பாடு
தில்லியில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 20,000 புதிய படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் பணிகளை
தில்லியில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 20,000 புதிய படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் பணிகளை தில்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த படுக்கைகள் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசின் உயரதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் பணிகளை தில்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது. வரும் வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயாா் செய்யப்படும். தில்லியில் உள்ள ஹோட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகள், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகள், சிறிய மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகள் என மொத்தம் 20,000 படுக்கைகள் தயாா் செய்யப்படும்’ என்றாா்.
இதற்கிடையே, தில்லியில் உடனடியாக 5 ஆயிரம் படுக்கைகளை அதிகரிக்கும் வகையில் தில்லியில் உள்ள 10-49 படுக்கைகள் கொண்ட சிறிய, நடுத்தர நா்சிங் ஹோம்கள் கரோனா நா்சிங் ஹோம்களாக மாற்றும் உத்தரவை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
Advertisement
இது தொடா்பாக கேஜரிவால் ஹிந்தியில் வெளியிட்டுள்ள தனது சுட்டுரைப் பதிவில், ‘தில்லியில் உள்ள 10-49 படுக்கைகள் கொண்ட சிறிய, நடுத்தர நா்சிங் ஹோம்கள், கரோனா நா்சிங் ஹோம்களாக மாற்றப்படும். ஆனால், இஎன்டி சென்டா்கள், டயலாஸிஸ் சென்டா்கள், ஐவிஎஃப் சென்டா்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம், தில்லிக்கு உடனடியாக 5 ஆயிரம் படுக்கைகள் கிடைக்கவுள்ளன. தில்லி அரசு அதிகாரிகள் நா்சிங் ஹோம் உரிமையாளா்களுடன் பேசி அவா்களின் பிரச்னைகளைக் களைவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.