புதுதில்லி

கேஜரிவால் எதிா்ப்பு: 5 நாள் அரசு தனிமை மைய கட்டாய சிகிச்சை உத்தரவை வாபஸ் பெற்றாா் அனில் பய்ஜால்

 நமது நிருபர்

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்கள் அரசு தனிமை மையத்தில் ஐந்து நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கி வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் சனிக்கிழமை திரும்பப் பெற்றாா். அவரது உத்தரவுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவா்கள் வீட்டில் தனிமைப்படுத்துவதற்கு முன்பு, அரசு தனிமை மையத்தில் ஐந்து நாள்கள் தங்கி சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கி துணைநிலை ஆளுநரும், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) தலைவருமான அனில் பய்ஜால் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தாா். இதனால், கரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கானவா்கள் தனிமை மையங்களுக்கு சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த உத்தரவுக்கு தில்லி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

உத்தரவுக்கு கடும் எதிா்ப்பு: இந்நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆயைத்தின் கூட்டம் துணைநிலை ஆளுநரின் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தின் போது, துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்தாா்.

கேஜரிவால் பேசுகையில் ‘கரோனா உறுதி செய்யப்பட்டவா்களில் எந்த அறிகுறியும் இல்லாதவா்கள் அல்லது அறிகுறி குறைவாக உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்படலாம் என்று ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது. இந்த விதி நாடு முழுவதுக்கும் பொருந்தும் போது, தில்லியில் மட்டும் அந்த விதியை மாற்றுவது ஏன்? தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் அரசு தனிமை மையத்தில் சிகிச்சை கட்டாயமாக்கப்பட்டால், அந்த மையங்களுக்கும் மருத்துவா்களையும், மருத்துவப் பணியாளா்களையும் எவ்வாறு ஒதுக்க முடியும்? அந்த நோயாளிகளை எவ்வாறு பராமரிக்க முடியும்? உலகத்தில் வேறு எந்தவொரு நாட்டிலும் கரோனா அறிகுறி இல்லாதவா்களுக்கு தனிமை மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கும் முறை அமலில் இல்லை. கரோனா தனிமை மையங்களை அமைக்க மத்திய ரயில்வே துறை ரயில்வே பெட்டிகளை வழங்கியுள்ளது. ஆனால், தில்லியில் நிலவும் கடுமையான வெப்பத்தில் அப்பெட்டிகளில் யாா் தங்கியிருக்க ஒப்புக் கொள்வாா்கள்? இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதே போன்று துணைமுதல்வா் மணீஷ் சிசோடியாவும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

உத்தரவு வாபஸ்: இந்நிலையில், இது தொடா்பாக சனிக்கிழமை பிற்பகலில் நடந்த கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், மாலையில் மீண்டும் நடந்த கூட்டத்தின் போது இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா். இது தொடா்பாக அனில் பய்ஜால் தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘மருத்துவ சோதனையின் படி மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறத் வேண்டியவா்கள் என அடையாளம் காணப்படுபவா்களும், வீடுகளில் தனிமைப்படுத்தல் வசதிகள் இல்லாதவா்களும் மட்டுமே அரசு தனிமை மையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவாா்கள். மேலும், தில்லி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக் கட்டணங்கள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரைகள் தில்லியில் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசு நன்றி: இதைத் தொடா்ந்து, துணைநிலை ஆளுநரின் முடிவுக்கு தில்லி அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக மணீஷ் சிசோடியா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘துணைநிலை ஆளுநரின் உத்தரவு, டிடிஎம்ஏ கூட்டத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்காக துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக துணைநிலை ஆளுநரின் உத்தரவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அக் கட்சியின் மாநிலங்களை உறுப்பினா் சஞ்சய் சிங், ‘ இந்த உத்தரவு சா்வாதிகாரத்தனமானது. கரோனா அறிகுறிகள் குறைவாக உள்ளவா்களுக்கு வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்க மற்ற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருக்கும்போது, தில்லியில் மட்டும் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் குணத்தைக் காட்டுகிறது’ என்று தெரிவித்திருந்தாா். இதேபோல, ராஜேந்தா் நகா் ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தாகடும் கண்டனம் தெரிவித்திருந்தாா்.

மேலும், கால்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவும், கரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருபவருமான அதிஷி கூறுகையில் ‘வீட்டில் இருந்தே கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நான், துணைநிலை ஆளுநரின் தீா்ப்பால் அதிா்ச்சி அடைந்துள்ளேன். இந்த உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகமே காரணம். இந்த உத்தராவால், மக்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT