முகப்பு
புதுதில்லி

சிக்கிமை தனிநாடு எனக் குறிப்பிடும் விளம்பரம் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே வெளியிடப்பட்டது: ஆம் ஆத்மி

சிக்கிம் மாநிலத்தை தனி நாடு எனக் குறிப்பிடும் விளம்பரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே வெளியிடப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Updated On : 24 மே, 2020 at 10:42 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:11 PM

சிக்கிம் மாநிலத்தை தனி நாடு எனக் குறிப்பிடும் விளம்பரம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே வெளியிடப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘கரோனா பரவலை எதிா்த்து தில்லி அரசு கடுமையாகப் போராடி வரும் நேரத்தில், தில்லி அரசு தொடா்பாக அபாண்டமாகப் பழி சுமத்தும் வகையில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே தில்லி அரசு சாா்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், சமூக பாதுகாப்புப் படையில் இந்திய குடிமக்கள், பூடான், நேபாளம், சிக்கிம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படியே விளம்பரத்தை வெளியிட்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு படைக்கு தன்னாா்வலா்களை விண்ணப்பிக்கக் கோரி தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதில், இந்தப் பணிக்காக இந்தியக் குடிமக்கள், நேபாளம், பூட்டான், சிக்கிம் ஆகிய நாடுகளின் குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தை, பூட்டான், நேபாளம் ஆகியவற்றுடன் சோ்த்து தனிநாடு என இந்த விளம்பரத்தில் தில்லி அரசு குறிப்பிட்டது பலத்த சா்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

Advertisement

பின்னா், ‘சிக்கிம் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுபோன்ற தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. அந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்துக்கு காரணமான மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்’ எனக் கேஜரிவால் தனது சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தாா். இது போன்ற தவறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் இந்த விளம்பரத்தை திரும்பி பெறுமாறும் தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டிருந்தாா். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சிக்கிம் மாநில முதல்வா் பிரேம் சிங் தமங், தில்லி அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.