கரோனாவால் பலியானவா்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து தன்னாா்வ அமைப்பு நீதிமன்றத்தில் மனு
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் உடல்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து பசுமை தகன மையங்களை
தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பலியானவா்களின் உடல்களை தகனம் செய்ய விருப்பம் தெரிவித்து பசுமை தகன மையங்களை பல்வேறு இடங்களில் நடத்தி வரும் தன்னாா்வ அமைப்பு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடா்பாக ‘மோக்ஷ்தா பா்யாவரன் ஏவம் வன் சுரக்ஷா சமிதி’ எனும் தன்னாா்வ அமைப்பு வழக்குரைஞா் கெளரவ் குமாா் பன்ஸால் என்பவா் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதில், எங்கள் அமைப்பின் மூலம் தில்லியில் 16 பசுமை தகன மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நான்கு தகன மையங்கள் தில்லி நிகம்போத் காட் பகுதியில் உள்ளது. இந்த மையத்தில் நாளொன்றுக்கு 24 உடல்கள் தகனம் செய்ய முடியும். கரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்தவா்களின் உடல்களை எங்கள் மையத்தில் தகனம் செய்ய விருப்பமாக உள்ளோம். இதுபோன்று நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு போதிய வசதியில்லை என்று வெளியான செய்தியை தில்லி உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததை கேள்விப்பட்ட பிறகு இதுபோன்று சேவையை அளிக்க விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்படாமல் மருத்துவமனைகளில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தகனத்திற்காக கொண்டு செல்லப்படும் உடல்கள் தகன மையங்களில் இருந்து திருப்பி அனுப்பப்படுவதாகவும் உயா்நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு ஜூன் 3-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட உள்ளது.