முகப்பு
புதுதில்லி

மழையால் வெயிலின் தாக்கம் குறைவு, திருப்தி பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் இரு தினங்களாக பெய்த சூற்றைக்காற்றுடன்கூடிய மழை காரணமாக சனிக்கிழமை நகரில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது.

Updated On : 30 மே, 2020 at 11:56 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

தலைநகா் தில்லியில் இரு தினங்களாக பெய்த சூற்றைக்காற்றுடன்கூடிய மழை காரணமாக சனிக்கிழமை நகரில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்திருந்தது.

தில்லியில் சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்துஅதிகரித்து வந்தது. தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. பல்வேறு இடங்களில் அனல் காற்றும் வீசியது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் தில்லியில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் ஆங்காங்கே தூறல் மழை இருந்தது. இதன் காரணமாக சனிக்கிழமை நகரில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இதமான வானிலை சூழல் நிலவியது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 22.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 37 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

Advertisement

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 72 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 54 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37.6 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 22.4 டிகிரி செல்சியஸ், 36.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 73 சதவீதம், மாலையில் 63 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 69 சதவீதம் மற்றும் 83 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தென்கிழக்கு திசையில் இருந்து தில்லிக்கு பகல் நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மழை பெய்ததன் காரணமாக காற்றின் தரத்தில் திருப்தி பிரிவு நீடித்தது. இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 57 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவுக்கு வந்தது. மதுரா ரோடு, சாந்தினி சௌக், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், லோதி ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மே 31) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே தூறலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தில்லிக்கு தரை மேற்பரப்பு காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசும் என்றும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.